புதன், 1 ஏப்ரல், 2020

மிகவும் வித்யாசமான அற்புதமான பதிவு.. வாசிக்க தவறி விடாதிர்கள் நண்பர்களே


மிகவும் வித்யாசமான அற்புதமான பதிவு.. 
வாசிக்க தவறி விடாதிர்கள் நண்பர்களே

#அன்புள்ள_அம்மா..,

நான் ஜனித்திருப்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.ஆம் அம்மா...உங்கள் வயிற்றில் தான் இருக்கிறேன்..சென்ற நான்கு தினங்களாய்... எனக்கான உங்கள் காத்திருப்பு... இன்னும் சில மாதங்கள் தான்.

நேற்று உங்கள் உறவுக்கார திருமணத்தில் யாரோ உங்களை மலடி என்று முதுகுக்கு பின் சொன்னது கேட்டு துடித்துப்போய்விட்டீர்கள்...உரக்க சொன்னேனே அம்மா...கேட்கவில்லையா? கவலையோடு நாட்களை எண்ணி காத்திருக்கிறீர்கள்...கூடவே அப்பாவும்...வரலைலன்னு அடிக்கடி கேட்டு பெருமூச்சு விடுவது பார்த்து பாவமாயிருக்கிறது.உங்களுக்கே புரியவில்லை...அப்பாவுக்கு எங்கே கேட்டிருக்கும் நான் ஒவ்வொரு முறையும் அவருக்கு பதில் அளித்தது.

நேற்றிரவு அப்பா உங்களிடம் அவருக்கு பெண் தான் வேண்டுமென்றார். நீங்களோ எந்தக் குழந்தை கிடைத்தாலும் நல்லது தானே என்றீர்கள்.அதற்கு அவரோ ஆண் என்றால் பார்க்கவே வரமாட்டேன் என்றார்.அப்பாவுக்கு ஏனோ பெண் குழந்தை மேல் அவ்வளவு ப்ரியம்.ம்ம்ம்..நான் கொடுத்து வைத்தவள். உங்களிருவர்க்கும் மகளாய் வரப்போகிறேனே...

அந்த திருமணத்தில் உங்கள் அத்தை மகள் தன் குழந்தையைக் கலைத்ததாய் சொன்ன போது நடுங்கிப்போனேன்...ஒரு வேளை நானும் அழிக்கப்படுவேனோ என்று...நேற்றிரவு எனக்கான உங்கள் இருவர் கனவுகளைக்கேட்ட பின் தான் உங்கள் சாம்ராஜ்யத்தின் ராணியே நான் தான் என்று உணர்ந்தேன்.மன்னித்துவிடுங்கள் அம்மா...அந்த கொலைகார கூட்டத்தில் உங்களையும் சேர்த்ததற்கு.

உங்களுடைய சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது தான் கண்டிப்பாய் அப்பாவை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும்.ஏன் என்னைப்பற்றியே நீங்கள் இருவரும் பேசிக்கொள்கிறீர்கள். நீங்கள் வளர்ந்த நாட்கள்...அப்பாவை சந்தித்த தருணங்கள் எல்லாம் பற்றி கேட்க ஆசையாக இருக்கிறது.கொஞ்ச நாட்கள் தானே...பொறுத்துக்கொள்கிறேன்.அடிக்கடி அப்பாவை நீங்கள் காதலாய் பார்க்கையில் என் ஆர்வம் கூடித்தான் போகிறது.

உங்கள் கனவுகளை எல்லாம் கேட்கையில் எனக்கு இப்பவே இறங்கி வந்து உங்களை கட்டிக் கொள்ளத்தோன்றுகிறது அம்மா. நேற்றிரவு அப்பா சொல்கிறார்...நான் மருத்துவராய் ஆகணுமாம்... உடன் நீங்கள் நம் பிள்ளை விருப்பம் தான் எல்லாம் என்கிறீர்கள்.என்னவாய் ஆனாலும் உங்களைப் போல் இருக்கவேண்டும் என்று ஆசை. நான் வளரும் வரை உங்கள் அருகிலே இருக்கவே எனக்குஆசை.நான் வளரும் வரை பணிக்கு செல்லமாட்டேன் என்று அப்பாவிடம் நீங்கள் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்தது. என் செல்ல முத்தங்கள் இப்பவே உங்களுக்கு...

உங்களிருவர் கண்களில் லேசாய் ஈரம்...என் திருமணம் பற்றி நீங்கள் பேசும் போது...உங்கள் இருவர் இடையே போட்டி யார் எனக்கு துணை தேடுவது என்று...முடிவில் அப்பா சொல்கிறார்...என் டாக்டர் பொண்ணு... அவளே பார்ப்பாள் என்று... பார்த்து நமக்கு அறிமுகம் செய்வாள் என்று.இதெல்லாம் கேட்கையில் உங்கள் இருவரையும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. உங்களிருவரை விட்டு ஒரு நாள் செல்வேனா அம்மா?

அப்பாவுக்கு இப்பவே கவலை.நீங்கள் என்னை எப்படி இத்தனை மாதங்கள் சுமப்பீர்கள் என்று...எனக்கு அதே கவலை தான் நான் வளர வளர...உங்களால் எப்படி என்னை சுமக்க முடியும்...நான் குட்டியாகவே இருந்துவிடட்டுமா? கொஞ்ச நாட்களில் உங்களுக்கு தெரியும் என் வருகை பற்றி.உங்கள் முகத்தில் அந்த பூரிப்பு பார்க்க ஆசையாய் இருக்கிறது.அப்பாவின் நடையில் வரப்போகும் துள்ளல் காண காத்திருக்கிறேன் அம்மா.

எதிர் வீட்டு குழந்தைகள் கடந்து போகிறார்கள்...உங்கள் முகத்தில் ஏக்கம்...நான் வந்து விட்டேன் அம்மா என்று நான் சத்தமாய் சொல்வது கேட்கவில்லை தான் உங்களுக்கு...இன்னும் கொஞ்ச நாட்கள் தான் அம்மா..நீங்கள் கொஞ்ச...எனை அமுதூட்டி..சீராட்டி வளர்க்க...பள்ளி அனுப்பி கண் கலங்கி கை அசைக்க...இன்னும் உங்கள் அத்தனை கனவுகளும் கைகூட...பொறுத்துக்கொள்ளுங்கள் அம்மா சில காலம்... வந்து விடுகிறேன் உங்களைத் தேடி...

இப்படிக்கு, 
விரைவில் உங்கள் கைகளில் வரத்துடிக்கும்,

#அன்பு_மகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக