வியாழன், 6 அக்டோபர், 2016

நவராத்திரி பற்றிய 40 வழிபாட்டு குறிப்புகள்

நவராத்திரி பற்றிய 40 வழிபாட்டு குறிப்புகள்

நவராத்திரிக்கு பின்பற்ற வேண்டிய 40 வழிபாட்டு குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரீவப்பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

9. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

10. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

11. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

12. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

13. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

14. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீடு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

15. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

16. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை, சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

17. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

18. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

19 நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

20. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

21. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

22. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

23. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

24. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

25. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

26. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப் பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

27. நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா கவலைப்படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

28. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

29. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

30. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

31. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

32. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

33. நவராத்திரியில் வெறும் கோலம் மட்டும் போட்டால் போதாது, கட்டாயம் செம்மண் இட வேண்டும். எந்த வீட்டுக் கோலத்தில் செம்மண் இருக்கிறதோ, அங்குதான் அம்பாள் மனம் மகிழ்ந்து வருவாள் என்பது ஐதீகம்.

34. நவராத்திரி நாட்களில் குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடு, இதிகாச புராண விஷயங்களை தெரிய வைக்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம் கதைகளை சொல்வது பயன் உள்ளதாக இருக்கும்.

35. நவராத்திரி முதல் நாள் பூஜைக்கு வாங்கிய வெற்றிலை மீதமாகி விட்டால் தூரப்போட்டு விடாதீர்கள். அந்த வெற்றிலைகளை ஒரு பித்தளைப் பாத்திரத்தில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். நீண்ட நாட்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும்.

36. நவராத்திரி சமயங்களில் அம்பாள் ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதாக சொல்வார்கள். அதனால் அச் சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளைத் தைக்கக் கூடாது. முடிந்தவரை ஊசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

37. நவராத்திரி பத்து நாளும் அம்மனுக்கு இனிப்பு நைவேத்தியம் வைக்க வேண்டும். அவலை நன்றாக நெய்யில் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். நல்ல கெட்டியான பால் கொண்டு வேக வைத்து, ஏலத்தூள், டைமண்ட் கற்கண்டுகளைச் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, நெய்யில் பொரித்துக் கொட்டினால் அவல் பாயசம் நன்றாக இருக்கும். தேவையானால் தேங்காய்ப் பாலையும் விடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

38. சரஸ்வதிப் பூஜையன்று கொலுவில் புத்தகங்களையும் வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை தூவி, தூப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

39. நவராத்திரி என்பது பண்டிகை, உறவுகளை வளர்க்கும் அன்புப் பாலமாகவும் விளங்குகிறது. கொலு நாட்களில், வீட்டுக் குழந்தைகளை அவரவர், மாலை வேளைகளில் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கப் பழக்க வேண்டும். இது உங்கள் குழந்தைகளிடம் மனிதநேயப் பண்பாடு வளர உதவிச் செய்யும்.

40. நவராத்திரி 9 நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள் நல்ல இணக்கம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக