சனி, 24 செப்டம்பர், 2016

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

1. நீங்கள் வெளியில்  அழகாக உடையுடுத்தி செல்லும் போது , மக்கள் உங்களை  கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத்  தெரியும். அவர்கள் அவர்களையுமறியாமல் உங்கள் காலணிகளைத் தான் முதலில்  பார்க்கிறார்கள் என்று தெரியுமா?

( இது " Bata "கடை விளம்பரம் இல்லை. உளவியல் உண்மை . நம்புங்கள்)

2.  நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து  பணி  புரிபவரா? ஒரு நாளைக்குப்  பதினோரு மணி நேரம் இப்படியே  உட்கார்ந்திருந்தால்  கண்டிப்பாக இன்னும்  மூன்று வருடங்களில்  உங்களுக்கு  ஏதாவது  வியாதி வந்தே தீரும் .

(நான் சொல்லவில்லை. ஆய்வறிக்கை சொல்கிறது. )

3.உங்களைப் போல் அச்சு அசலாக  இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர்.

( போதும் நீ விடும் ரீல்  என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.) ஆனால் நீங்கள்  ஆறுபேரில் ஒருவரையாவது  உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக  சந்திக்கப் போகிறீர்கள். சந்தித்தால்  என்னிடம் சொல்லுங்கள். இது சாத்தியம் தானா என்று அறிய எனக்கும் ஆவல்.

4." முதுகெலும்பில்லாத கோழையா? "  என்று யாரும் உங்களைப் பார்த்து கேட்கக் கூடாதென்றால் , தூங்கும் போது தலையனை  வைத்துக் கொள்ளாதீர்கள்.  முதுகுவலியும் வராது, முதுகெலும்பும் உறுதி படுமாம்.

5. ஒருவரின் உயரத்திற்கு  அவர் தந்தையும், அவருடைய  எடைக்குத் தாயும் காரணம்.

( சான்றோனாக்கி உயர்த்துதல்   தந்தையும், ருசியான உணவளிப்பதும் தாய் தானே)

6.அலுவலக மீட்டிங்கில்  இருக்கும் போதே கண்ணை செருகிக்கொண்டு  தூக்கம் வருகிறதா? கவலை வேண்டாம். தலையை  இடமும் வலமுமாக ஆட்டுங்கள் . தூக்கம் கலைந்து விடும்.

(ஆனால்  தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தால் , உங்கள் பாஸ் , கண்டு பிடித்து விடுவார். ஜாக்கிரதை)

7. நம் மூளை நம்மை ஏமாற்றாது . நல்ல உணவு, கவர்ச்சியான, அழகான மனிதர்கள்,  ஆபத்து நெருங்குதல்.  இவை  மூன்றையும் உங்களுக்கு கண்டுபிடித்துக்  காட்டிக் கொடுத்து  விடும்.

8.நீங்கள் டீ  பேக்ஸ்  உபயோகித்து டீ  குடிப்பவரா?? அப்படியென்றால் உங்கள்  ஷூ வில்  துர்வாசனை  வராது. (டீக்கும்  ஷூக்கும் என்ன சமபந்தம்  என்று யோசிக்க வேண்டாம். டீ  குடித்த பின்பு, அந்த டீ பேகை ஷூவிற்குள்  போட்டு வைத்தால், துர்நாற்றத்தை அது உறிஞ்சிக் கொள்ளும்.

9.  தேனீக்களை  நம்பி தான் மனித இனமே இருக்கிறது. தேனீக்கள்  உலகை விட்டு  அழிந்து விடுமானால் நான்கு வருடங்களுக்குள்  மனித இனம் பூண்டோடு  அழிந்து போகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்   நம்மை எச்சரித்து விட்டு சென்றிருக்கிறார்.  ஆனால் நாம் கேட்பதாயில்லை. தேனீக்கள் அழிந்து வரும் உயிரின வகையில்  சேர்ப்பதில் படு தீவிரமாக இருக்கிறோமே!

10. உலகில் எத்தனை வகை ஆப்பிள்கள் இருக்கின்றன  என்று தெரியுமா உங்களுக்கு?  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  வகையான ஆப்பிளை  சாப்பிட்டுக் கொண்டே வந்தால்  எல்லா வகையான ஆப்பிள்களையும் சாப்பிட சுமார் இருபது வருடம் ஆகும்.

11. உண்ணா விரதம்  இருக்கப் போகிறீர்களா? பயம் வேண்டாம்.  உண்ணாமல்  பல வாரங்கள்  வரை நாம் உயிர் வாழலாம். சாப்பிட்டா விட்டாலும் பரவாயில்லை. தூங்காமல் இருக்க வேண்டாம்.   உறங்காமல் பதினோரு  நாட்களுக்கு மேல்  ஒருவரால்  உயிர்  வாழ முடியாது.

12. அதிகமாக சிரிப்பவர்கள்  அதிக நாட்கள்  உயிர்  வாழலாம் . அதனால் சிரித்துக் கொண்டேயிருங்கள்.  ( உங்களை " ஒரு மாதிரி " என்று  யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல)

13. நம் மூளையின் சக்தி எவ்வளவு  என்று தெரியுமா? விக்கிபிடீயாவைப் போல் ஐந்து மடங்கு  விஷயங்களை  சேகரித்து வைத்துக் கொள்ளும் ,என்கிற செய்தி  ஆச்சர்யமளிக்கிறது  இல்லையா!

14.நம்  மூளைக்கும்  மின்சாரம் தேவைப்படுவது  தெரியுமா?  பத்து வாட் பல்ப்  எரிவதற்குத் தேவையான  மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது. நம் மூளை . ரகசியமாக இருக்கட்டும் இந்த செய்தி. இல்லையென்றால் மின்சார வாரியம்  அந்த மின்சாரத்திற்கும்  கட்டணம்  கேட்கும் . .

15. மன உளைச்சலுக்கு ஒரு மாமருந்து இருக்கிறது. என்ன என்கிறீர்களா?
புன்னகை.  முடிந்தவரை  புன்னகைத்துக் கொண்டே இருங்கள்.  மன உளைச்சல் உங்களை விட்டு ஓடியே  போய்  விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக