வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்..


இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்..

இதயம், உடலிலுள்ள அனைத்து இரத்தக் குழாய்களுக்கும் இரத்தத்தைச் சுழற்சி செய்யும் ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மேலும் இது முதல்நிலை இரத்த ஓட்ட அமைப்புப் பகுதியாக உள்ளது. இன்றைய அறிவு டோஸில், நமது இதயம் எவ்வாறான வியக்கத்தக்க பல செயல்களை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

ஒன்று தெரியுமா…? இதயம் துடிப்பதற்கு மூளை தேவையில்லை; ஏன், உடலும் கூட தேவையில்லை. இதயத்திற்க்குச் சொந்தமாகவே மின்சார அமைப்பு உள்ளது. இதனால், மூளை இறந்து போன பின்பும் கூட சில நிமிடங்களுக்கு இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்! மேலும், உடலிலிருந்து நீக்கிய பின்பும், ஒரு குறுகிய நேரத்திற்குத் துடித்துக் கொண்டிருக்கும். அதுவும் குறிப்பாக பிராணவாயு (oxygen) இருக்கும் வரை இதயத்தால் துடிக்க முடியும்! இது அற்புதம் அல்லவா?

நமது இதயம் மிகவும் சுறுசுறுப்பான ஓர் உறுப்பு ஆகும், ஏனென்றால் அது ஒரு நாளைக்கு மட்டுமே 100,000 தடவை துடிக்கின்றது. சராசரி வாழ்நாள் முழுவதும், சுமார் 2.5 பில்லியன் முறை துடிக்கிறது. உங்கள் இதயம் சுழற்சி செய்யும் இரத்தம், இரத்த நாளங்கள் வழியாக சுமார் 100,000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது.

இரத்த அழுத்தம் இரண்டு அளவீடு ஆகும்: சிஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயம் துடிக்கின்ற போது ஏற்படும் அழுத்தம், மற்றும் இதயவிரிவமுக்கம் என்பது இதய துடிப்புகளுக்கு இடையே ஏற்படும் அழுத்தம். இந்த இரண்டு அழுத்தங்களை வைத்தே முறையாக இரத்த அழுத்தத்தை அளவிட முடியும், என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், சில ஆய்வுகள் இரண்டு கைகளிலும், இரத்த அழுத்த அளவீடு எடுத்தால் மட்டுமே, சரியான முறையில் இதய நோய் ஆபத்தைத் தீர்மானிக்க முடியும் என்று கூறுகின்றன.

இதய நோய்கள், துணையை இழந்த வயதானவர்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் ஆபத்து உள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஆண்களை விட பெண்களே அதிகமாக இதய நோய்களால் மரணிப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.



பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி – நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள்)

பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவுதான் இருக்கும்.
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போது உருவாகிறது.

உங்கள் உடலில் இருக்கும் இந்த அதிசயமான இதயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? உங்கள் கருத்துகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக