செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

வயிற்று பிரச்னைக்கு தீர்வு தரும் வாழைப்பழம்..


வயிற்று பிரச்னைக்கு தீர்வு தரும் வாழைப்பழம்..

வாழைப்பழத்தை, ஏழைகளின் கனி என்று அழைக்கின்றனர், எல்லோருக்கும் எளிதாக, மலிவாக கிடைக்கும் பழம் வாழைப்பழம். அது மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம். நீரிழிவு நோயாளிகள் மட்டுமே வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. அவர்களும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து, மிகவும் கனியாத பழத்தை கால் பங்கு சாப்பிடலாம் என்கின்றனர்.

வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். இரவு உணவுக்கு பின் சாப்பிடும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். வாழைப்பழங்களில் பல வகை உண்டு; எல்லா வகை வாழைப்பழங்களிலும் சத்துகள் உள்ளன என்றாலும் பூவன் வாழைப்பழம் சிறந்ததாக விளங்குகிறது.
பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாக கிடைக்கும் பழம். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது. பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும்; கோடை காலங்களில் தாராளமாக உண்ணலாம். வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

மொந்தன் வாழைப்பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்; காமாலைக்கு இது சிறந்த பழம். ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால்
இருதயம் பலப்படும். நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப்பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் பலம் பெறும். குழந்தைகளுக்கு, நன்றாகப் பழுத்த நேந்திரம் பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
செவ்வாழைப் பழம், உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின் "ஏ' அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும்.
ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும். இரவில் அமைதியான தூக்கம் வருவதற்கு இரவில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பாலும் அருந்தினால் உடலுக்கும் நல்லது. உடலைத் தேவையான எடையில் வைத்துக் கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. அதாவது, உடல் மெலிந்தவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உடல் பெருக்கும்.
அதே சமயம், பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக