செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வயிற்றுவலி வேதனை தீர எளிய சிகிச்சை முறைகள்..



வயிற்றுவலி வேதனை தீர எளிய சிகிச்சை முறைகள்..

மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும்  உணவு, பருகும் நீர்,  இவற்றை செரிமானம் செய்யக்கூடிய  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல  உறுப்புகள் அடங்கியுள்ளது.

வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது தாங்க முடியாதது. இதற்கு வயது  வித்தியாசம் எல்லாம் கிடையது. இந்த வயிற்று வலிக்கான காரணம் என்ன? இதை தவிர்ப்பது எப்படி, இதற்கான சிகிச்சைகள் என்ன? அதுபற்றிய விவரங்கள்:

வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை,  குடல் அழற்சி, குடல் வால்  அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள்  போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படலம்.

வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வலி வரலாம்.

குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள்,  தொடர் கணைய  அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும்

புண்ணும்  (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உணவுக்குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும்.

 அதேபோல் அடி வயிற்றில் வலி  ஏற்பட்டால் குடல் பிரச்னை  குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக்கட்டியாக இருக்கக்கூடும். பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு காரணம் புற்று நோயாக இருக்கக்கூடும். இதனால் மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப்  பெருக்கம் போன்ற பல  பிரச்னைகள் ஏற்படலாம்.


அல்சர் உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். இவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். அதிகமான கவலை, மன உளைச்சல், உணர்ச்சி வேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன.

 இந்த அமிலங்களின்  தாக்கத்தால்தான்  பெரும்பாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகிறது.



அறிகுறி: வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவை இருக்கலாம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால்,  குடலில் புண் (அதிக  வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி  ஆகும்.

 மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது  அடிவயிற்றில் கடுமையான வலி  ஏற்படும். ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே  தங்கிவிடுகின்றன.

உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல்  இருக்கும். இதற்கு உண்மைய £ன காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால்தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு  போன்றவை ஏற்படுகிறது. காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.

வயிற்று வலியை தவிர்க்க

*  ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாது.

* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக  சாப்பிட்டால் உடலில் உள்ள  செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.

* உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வயிற்று நோயும், தேனின் பயனும்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக