வியாழன், 15 ஜூன், 2017

அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.



அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.


கருங்குருவை- விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா- இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
கைகுத்தல் புழுங்கல் அரிசி- low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
காட்டுயானம்- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி- மிகவும் இனிப்பு சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா- பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா- இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா – இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காளான் சம்பா- உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா- பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா- பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா- உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
சீதாபோகம்- உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா- இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை- தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா- அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா- நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா- உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா- வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச் சம்பா- வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி- மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி- மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி- பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.
கார் அரிசி யை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
கோரைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரிசி யைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
தினை அரிசி யும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
உடலுக்கு ஆரோக்கியமான அரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
அரிசிக் கஞ்சிகள்
கொதிகஞ்சி
உலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.
வடிகஞ்சி
சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.
புழுங்கலரிசி கஞ்சி
தமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.
புழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.
நோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது. தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.
பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.
புனர்பாகம் – இரு முறை வடித்த கஞ்சி
ஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும். இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.
அரிசிமா
அரிசியை பொடித்து செய்யப்படும் மாவு பல வித பலகாரங்கள் பட்சணங்கள் செய்ய உதவும். அரிசி மாவு, உளுந்து சேர்த்து செய்யப்படுபவை, தோசை, இட்லி, ஆகும். தோசை பித்தத்தையும், வாய்வையும் போக்கும். இட்லியும் திரிதோஷங்களை பெருக்காது. ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி மற்றும் இடியாப்பங்களை எளிதில் ஜூரணமாகும் எனப்பட்டாலும், இவை பத்திய உணவு ஆகாது. அரிசிமாவால் பணியாரங்கள், நல்ல ஜீரண சக்தி உடையவர்களுக்கே ஏற்றவை.
சில ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றில் வாய்வு இருந்தாலும், தோலில் சொறி, சிரங்கு இருந்தாலும் இட்லி, தோசை, இதர அரிசிமாவு தயாரிப்புகள் ஏற்றவையல்ல என்கின்றனர்கள். அரிசி மாவால் செய்யப்படும் பிட்டு உடலுக்கு வன்மை தரும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் போன்றவை வாய்வை அதிகரிக்கும், பசியை மந்தப்படுத்தும் என்கிறது சித்த வைத்தியம்.
சத்துமா
அரிசியை வறுத்து இடித்த மாவு இது. கோதுமை, பார்லி, கடலை இவைகளாலும் சத்துமா செய்வது உண்டு. இந்த மாவை நீருடன் சேர்த்து பிசைத்து சாப்பிட பசியடங்கும். மோருடன் சேர்த்து உண்டால் வயிற்று வாய்வு நீங்கும். சத்துமா எளிதில் சீரணமாகும். களைப்பு நீங்கும்.
அரிசி மாக்களி
அரிசியை நீரில் ஊறவைத்து எடுத்து, இடித்து மாவாக்க வேண்டும். இதை தீப்புண்கள், கொப்புளங்கள் மேல் தூவ, புண்கள் ஆறும் வேர்க்குரு, கரப்பானால் ஏற்படும் சினப்பு, அரிப்பு இவற்றின் மேலும் அரிசி மாவை தூவலாம். நீர்க்கசிவும் அரிப்பும் அடங்கும்.
தேவையான மாவை வாயகன்ற சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி, சிறிது தண்ணீர் விட்டு களியாக கிண்டிக் கொள்ளவும். இதை வெள்ளைத் துணியில் 1 அங்குல கனத்திற்கு தடவி, கொஞ்சம் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்ணையை அதன்மேல் பூசி, கட்டிகள், சீழ்க்கட்டிகள் இவற்றில் மேல் வைத்து கட்டவும். கட்டிகள் பழுத்து உடைந்து போகும். வலிமிகுந்த கட்டிகளுக்கு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளலாம்.
கிண்டும் போது கால் பங்கு கடுகுத் தூள் சேர்த்து, இறக்கி, வேப்பெண்ணைய் சேர்த்து மார்பிலும், முதுகிலும் 1-2 மணி நேரம் கட்டி வைத்தால் கரையாத மார்புச் சளியும் கரையும்.
அவல்
நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி, சிறிது வறுத்து, லேசாக இடித்தால், தட்டையாகி அரிசி வேறு, உமி வேறாக பிரியும். தட்டையான அரிசிக்கு அவல் என்று பெயர். அவலை ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ண உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும்.
அவல் ஊறவைத்த நீரை மட்டும் பருகினால், வயிற்றில் வாய்வு உண்டாகி, வலி கூட ஏற்படலாம்.
நெற்பொரி
நெல்லை பொரித்து, உமியை நீக்கி எடுத்தால் நெற்பொரி கிடைக்கும். இதை கஞ்சியாக தயாரித்து. வயிற்று நோய், சுரம், நீர்ச்சுருக்கு உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கலாம். சூடான பால் அல்லது தயிர், பழச்சாறு இவற்றில் ஊறவைத்து சாப்பிடலாம். நாவரட்சி, வாந்தி, வயிற்றுப்புண், விக்கல் மயக்கம், பேதி இவற்றுக்கும் நெற்பொரி கஞ்சி பயன்படும்.
இதில் பாகு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிடுவது குமட்டல், வாந்தி இவற்றுக்கு நல்லது. பண்டிகை காலங்களில் பொரி உருண்டை செய்வது நம் நாட்டு வழக்கம்.
பழைய சாதம் – நீராகாரம்
முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்கு தேவையான வலிமையை கொடுக்கவும். ஆண்மை பெருகும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும். அதிகம் புளிக்காத பழையதுடன், மோரும், தயிரும், வெங்காயம் அல்லது மாவடு, ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் கோடைக்காலங்களில் உடலை குளிர்வித்து, தெம்பூட்டும் தேவாமிர்தம் இந்த பழைய அமுது.
அரிசியை சமைக்கும் போது
அரிசியை நன்றாக வெந்திருக்கும்படி சமைக்க வேண்டும். அரிசி சரியாக வேகாவிடில் அது சரியாக செரிக்காது. வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும். அதே சமயம் மிகவும் குழைந்து போய், அதிகமாக வேகவிடப்பட்டு குழைந்து போன சாதமும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. புது அரி Plugins 9 சியில் சமைத்தால் சாதம் குழைந்து விடும். குழைந்த சாதத்தால் இருமல், வயிற்று உப்புசம் அதிகமாகும்.
அரிசியை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி எண்ணை நெய் அல்லது எலுமிச்சம் சாறை விட்டால், சாதம் பொல பொல வென்று மல்லிகைப்பூ போல் அமையும்.
வேகாத அரிசி, அதிகம் வெந்த அரிசி இவற்றால் வரும் வயிற்று கோளாறுக்கு சுக்கு தட்டிப் போட்ட வெந்நீரை குடிக்கலாம்.
ஆயுர்வேதம், அரிசி சாதத்தை உண்ணும் போது நெய் சேர்த்து உண்டால், கண் குளிர்ச்சி, சரியான ஜீரணம் ஏற்படும் என்கிறது.
நல்லெண்ணை சேர்த்து உண்டால் வயிற்றின் வரட்சி அகலும். நல்ல பசியெடுக்கும்.
பாலும் அன்னமும்
பாலமுது எனும், பாலும் அன்னமும் சேர்ந்த உணவு மற்றும் பாயசம், பித்தத்தை குறைக்கும். நீர் வேட்கை விலகும். ஆனால் அதிகமாக உண்டால், உடல் பருமன் கூடும். மற்றபடி இதை குழந்தை முதல் பெரியவர் வரை உண்ணலாம்.
பொங்கல் வகைகள் இதர சோறுகள்
அரிசியினால் செய்யப்படும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவு வகைகள் பிரசித்தி பெற்றவை. சர்க்கரை பொங்களை மிதமாக உட்கொள்ள வாந்தி நிற்கும்.
மிளகு சேர்த்த வெண் பொங்கல், வயிற்றுப் பொருமல், வாய்வு, மார்புக்கபம், பசியின்மை இவற்றை போக்கும்.
புளிச்சோறால் வாந்தி, சுவையின்மை போகும்.
எள்ளுப்பொடி அன்னம் வாய்வை நீக்கி வலிமை தரும்.
மாமிசம் சேர்த்து சமைத்த உணவு தாதுபுஷ்டி தரும். பசியை மந்தப்படுத்தும்.
அரிசியின் இதர உபயோகங்கள்
அரிசியிலிருந்து ஒரு வகை ஓயின் எடுக்கப்படுகிறது. அரிசி மது ஜப்பானில் பிரசித்தம்.
அரிசியை தீட்டி புடைத்தெடுக்கும் தவிட்டில் பி 1 வைட்டமின் அதிகம் உள்ளது. கால் நடை தீவனமாக பயன்படுகிறது.
100 கிராம் அரிசியில் உள்ள சத்துக்கள்
கார்போஹைடிரே-79கி
கொழுப்பு-0.6கி
புரதம்-7கிராம்
விட்டமின்பி-6-0.15கி
ஈரம்-13கி.
-நன்றி உணவு நலம் மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக