திங்கள், 19 ஜூன், 2017

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்



மீண்டும் தலித் ஜனாதிபதி பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் முறைப்படி அறிவித்தார். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரில் யாரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளது தெரிந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 71 வயதான ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிரமாக இயங்கிய அவர், இருமுறை ராஜ்ய சபா எம்.பியாகவும், பாஜகவின் எஸ்.சி பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பீகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார்.

பழங்குடியின மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக