வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கோடை வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு யோசனைகள் ..



கோடை  வெயிலை  சமாளிக்க ஜில்லுன்னு  யோசனைகள் ..

நாகரிக மனிதனின் நாகரீகமற்ற செயல் –இயற்கை வளத்தை சுரண்டி சுரண்டி ,இயற்கையை பேணாமல் நேரடியாகவும் மறை முகமாகவும் அழித்து அப்பப்பா என்ன வெயிலு என்னும் –இயற்கையை குறை சொல்லும் மனிதனுக்கு ஆயுர்வேதம் ,சித்த மற்றும் இயற்கை மருத்துவம் நோய் அணுகா விதியில் பல செயல்களை செய்ய சொல்கிறது .,ருது சர்யம் என்னும் எந்த மாதத்தில் எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் இடுகிறது ஆயுர்வேதம் .

கோடையில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்.

அடிக்கிற வெயிலுக்கு சன் ஸ்ட்ரோக் என்னும் திடீர் மயக்கம் அதை தொடர்ந்து வரும் மரணம் நம்மை பயமுறுத்தவே செய்கிறது ..

நீர் கடுப்பு
கல் அடைப்பு
மூல கடுப்பு
உடல் அரிப்பு
வேர்க்குரு முதல் பெரிய தோல் நோய்கள்
வைரஸால் வரக்கூடிய அம்மை நோய்கள்
உடல் எரிச்சல்
திடீர் மயக்கம்
உடல் சோர்வு
தூக்கமின்மை
நரம்பு தளர்ச்சி
வயிற்று புண்
மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்கள் ...


இந்த வெயிலுக்கு காரணம் என்ன ?

மரம் நட மனதில்லாமல் , செயற்கை குளிரூட்டிகள் பல வைத்து ஏ சி ரூம் இரவு தூங்கி ,ஐஸ் வாட்டர் பருகி ..காசுக்கு தக்கவாறு –கோடை வெயிலின் திடீர் கடைகளின் எசன்ஸ் சர்பத்துகளை அருந்தும் ,விவசாயத்தை அசிங்கம் என்று நினைக்கும் சாராசரி மனிதன் தான் காரணம் .

இயற்கையை நாம் அழிக்க அழிக்க தாக்கத்தை நமக்கு திருப்பி அடிக்க காத்து கொண்டே இருந்து பழி வாங்கி கொண்டிருக்கிறது .

எப்படி சமாளிக்கலாம் ?

கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகள்

•  தமிழர்களின் முக்கிய மற்றும் முதன்மை உணவு அரிசியாகும். அரிசியின் பல வகைகள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பருவ கால மாறுபாடுகளுக்கேற்ப அரிசி வகைகளைத் தேர்ந்து எடுத்து உண்பது நன்று. அவ்வகையில் கோடைக்கு ஏற்ற அரிசி சம்பாவாகும். அதனிலும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உபயோகிப்பதே உடலிற்கு குளிர்ச்சியை அளிக்கும். பச்சரிசியும் சூட்டை தணிப்பதில் சிறந்தது.நீராகாரம் நல்லது...டீ காபி தவிர்த்தல் நலம்

•  பயறு வகைகளில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து உஷ்ணத்தை நீக்கும். கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றால் உஷ்ண தாகம் குறையும்.


•  கீரை வகைகளில் ,வெந்தய கீரை ,வள்ளைக் கீரை, பரட்டைக் கீரை, பொன்னாங்காணி கீரை, முருங்கைக் கீரை, புளியாரைக் கீரை ஆகியவற்றிற்கு உடல் சூட்டைப் போக்கும் குணம் உண்டு.

•  உணவுக்குப் பயன்படும் பூ வகைகளில் வெங்காயப்பூ குளிர்ச்சி தரும்.


•  தண்டு வகைகளில் கீரைத்தண்டு மற்றும் வாழைத்தண்டு போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும்.

•  காய்களில் வாழைக்காய், அத்திக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், பெரும் பூசணிக்காய், பரங்கிக்காய், எலுமிச்சங்காய், புடலங்காய், களாக்காய் போன்றவை உடல் சூட்டை நீக்கும்.



•  பிஞ்சு வகைகளில் கத்தரிப் பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு முருங்கைப் பிஞ்சு போன்றவை உஷ்ணத்தைக் குறைக்கும்.

•  பழ வகைகளில் பேயன் வாழை, அத்திப்பழம், விளாம்பழம், இலந்தைப் பழம், நெல்லிக்கனி, புளியம்பழம், நாவற்பழம், கொட்டை முந்திரிப்பழம், மாதுளம் பழம், திராட்சைப் பழம் போன்றவை குளிர்ச்சியைக் கொடுக்கும்.

 இவற்றில் நெல்லிக்கனியை உணவிற்கு முன்னும், இலந்தைப் பழத்தை உணவிற்குப் பின்னும் உண்பது சிறப்பு.


•  கரும்பின் ரசம், வெல்லம், பழைய வெல்லப்பாகு, ஈச்சம் வெல்லம், சர்க்கரை போன்றவை குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  பசும்பாலைக் கறந்து சூடு ஆறவதற்கு முன்னால் உதய காலத்தில் பருக உடலின் சூடு தணியும்.


•  பசுந்தயிர் தாகத்தை தணிக்கும், எருமைத்தயிர் குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  வெண்ணெய் வகைகளில் வெள்ளாட்டு வெண்ணெய் குளிர்ச்சியை உண்டாக்கும்.


•  கறி வகைகளில் வான்கோழிக் கறி குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  உடல் சோர்வை போக்க கண்ட கண்ட எனர்ஜி ட்ரிங்க்சை விட நமது பானாகாரம்  மிகவும் நல்லது

ஆயுர்வேத மருத்துவத்தின் படி ..

•  பார்லி, கோதுமை, தேன், மண்பானையில் சேகரித்த நீர், மோர், இளநீர், திராட்சை,மாதுளம், பேரிச்சம்பழம்,ஏலக்காய், இலவங்கப்பட்டை.

•  பழங்களில் நுங்கு மிகவும் நல்லது

தவிர்க்க வேண்டியவை:-

•  அதிக காரம், எண்ணெய் பொருட்கள், தயிர், புளித்த உணவு வகைகள்,

 குளிர்சாதன பொருட்கள், மதுபானங்கள்., டீ.காபி,
எசன்ஸ் கலந்து ,சாக்கரின் கலந்த திடீர் கடைகளில் விற்கும் ஜீஸ் வகைகள் ,குளிர் பானங்கள் ..

இந்த குளிர்பானத்தில் இருப்பது என்ன ?

நன்னாரி சர்பத் ,ரோஸ் மில்க் ,சோற்று கற்றாழை சர்பத் ,என்று பாட்டில்களில் விற்கும் எல்லா பாட்டில்களிலும் ,மெத்திலிமிடாசோல்,சிட்ரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், காஃபின், சோடியம்சைக்லாமேட்,சுக்ரோஸ், கலர் சாயங்கள் போன்றவையே இருக்கிறது

இக்குளிர்பானங்களை உட்கொள்வதால் வரும் பக்கவிளைவுகள்:-

வயிற்றில் எரிச்சல், குமட்டல், வாந்தி, தோல் அழற்சி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மட்டுமல்லாமல் உயிர் கொள்ளி நோயான புற்றுநோய்
அபாயமும் அதிகம்........................................................
தினமும் செய்ய வேண்டியவை ..

உடலின் நீர் சக்தி குறையாமல் பார்க்க வேண்டும் –தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ..

கருங்காலி தண்ணீர் என்று மூலிகை குடிநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் தண்ணீரை பருகுதல் நலம் ..

வாயில் நல்லெண்ணை வைத்து வாய் கொப்பளித்தல் குளிர்ச்சியண்டாக்கும்.

மலம்,சிறுநீர்,காற்று போன்ற 13 வகையான இயற்கை வேகங்களை அடக்கிடக்கூடாது.

சுருமா -அஞ்ஜனக்கல்  போன்ற இயற்கையான கண் மை தீட்டல் நலம்.இளநீர் குழம்ப போன்ற கண் மருந்தும் தினம் பயன்படுத்தலாம்.

மதியம் ஒரு மணி நேரம் படுத்துறங்குதல் –பகல் உறக்கம் –இந்த வெயில் காலத்தில் நல்லது ..

இரவும் சீக்கிரம் தூங்க வேண்டும் ..

வியர்வை அதிகம் வர வைக்கும் எந்த கடினமான பயிற்சியும் செய்ய கூடாது

தேவை இன்றி வெளியில் அலையவே கூடாது .ஆனால் விட்டமின்D  ஐ மாலை நேரத்தில் கணக்கிட்டு பெறலாமே..

காதி கிராப்ட் ஆடை அணிந்து நமது சுதேச பற்றை மற்றவருக்கும் காட்டி நாமும் நலம் பெறலாம்

கொளுத்தும் அனல் காற்றை வென்றெடுக்க ஆயுஷ் சொல்லும் ரகசியம்

எண்ணெய் குளியல் –நல்லெண்ணெய் தேய்த்து –அதன் விதி முறைப்படி வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் நாம் அக்னியை வெல்லலாம் .

தினமும் தலைக்கு எண்ணை வைத்து குளிக்கணும்.

ஆயுஷ் மருந்துகள் ஏதேனும் கோடை வெயிலை சமாளிக்க இருக்குமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ..

சந்தனாசவம் ,திராகஷாதி கஷாயம் ,திராக்ஷா அரிஷ்டம் ,குமார்யாசவம் , வாசா குளுச்யாதி கஷாயம் ,சந்திர பிரபா வடி ,ச்யவன ப்ராஷ லேஹ்யம் ,வெண்பூசணி லேஹ்யம் ,சிலாசத்து பற்பம் ,கல்நார் பற்பம் ,வெங்கார பற்பம் ,திரிபலா கற்ப சூரணம். கரிசாலை கற்ப சூர்ணம் ,சந்தனாதி தைலம் ,ஹிம சாகர தைலம் ,தூர்வாதி தைலம் ,யுனானி மருத்துவத்தில் பல சர்பத்துகள் –இந்த வெயிலை சமாளிக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக