ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கையில் சாதனை படைத்த சில வெற்றியாளர்கள் இதோ…

வெற்றி படிக்கட்டுகள்....

தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கையில்  சாதனை படைத்த சில வெற்றியாளர்கள் இதோ…

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான்.

ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உலகையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான்.

அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து,  வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய ஒருசில சாதனையாளர்கள் இதோ…

*ஹெலென் கெல்லர்..*

இளம் வயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். ஆனி சுலிவன் என்பவரால் சைகை மொழி கற்பிக்கப்பட்டு பிறரோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். சுமார் 40 நாடுகளுக்குப் பயணம் செய்து மாற்றுத் திறன் கொண்டவர்கள்,தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார். உலகிலுள்ள மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார் ஹெலென். இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தி மிராக்கிள் உமன்’ என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி,  பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் பிறந்த தினமான ஜூன் 27, அமெரிக்காவில் ஹெலென் கெல்லர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

*சுதா சந்திரன்..*

நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். தமிழ் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தோன்றியவர். மிகச் சிறந்த பரதக் கலைஞர். இயற்கை இவரோடு விளையாடியபோது இவருக்கு வயது 17. திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இழக்க நேரிட்டது, அதன் பிறகு, ‘ஜெய்ப்பூர் ஃபூட்’ எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார். ஆனால் இவர் நடப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தைத் திருப்பினார். தேர்ந்த பரதக் கலைஞரான இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவரது வாழ்க்கையைத் தழுவி தெலுங்கில் ‘மயூரா’  ( தமிழில் 'மயூரி') என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் இவர். தனது சோதனையை பெரிதுபடுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் இவர்.

*ஸ்டீபன் ஹாகிங்..*

1942ல் பிறந்த இந்த அறிவியல் மேதை தனது 21வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப் பட்டார். கை, கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கை கழிந்த போதும், இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். இவரது ‘ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம்,  விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது. 2009ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதிலும், அசராமல் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளார் இவர்.

*ஜான் நேஷ்..*

நோபல் பரிசு பெற்ற இவர், கணிதத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியவர். இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் எனப் பல இடங்களிலும் பயன்படுகிறது. சைசோப்ரேனியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட நேஷ், ஜாமெட்ரி, டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தீவிர மன நோயால் பாதிக்கப்பட்ட இவர், கற்பனையாக சில விஷயங்களை புனைந்து கொண்டு பயப்படுவார் என்று அவரது மனைவி கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு மிகவும் பிடித்த கணிதத்தை அவர் ஒருபோதும் ஒதுக்கவில்லை. கணிதத்தோடு வாழ்ந்ததால்தான் அவர் நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் நிணைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

*பீத்தோவன்..*

இசை உலகின் பிதாமகனாய் கருதப்பட்டவர் பீத்தோவன். மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞரான இவர், மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும் பாலமாய் விளங்கியவர். இவர் முதன்முதலில் இசைக் கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது 8. தனது 26-வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீத்தோவன். ஆனால் இவர் அசரவில்லை. இசையிலேயே மூழ்கினார். இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. பைபோலார் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த இசை மேதை.

*மர்லா ருன்யான்..*

அமெரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனையான இவர் பார்வையற்றவராவார். மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில்,  மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1992 பாராலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களும்,1996ம் ஆண்டு 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஹெப்டத்லான், மாரத்தான், 500 மீட்டர், 20000 மீட்டர் ஆகிய பிரிவுகளில் அமெரிக்காவின் தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான்.

*நிக் வுஜுசிக்..*

வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. 1982ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக்கிற்கு இரண்டு கைகள், கால்கள் கிடையாது. சிறு வயதில் பல துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளான நிக்,  பின்னர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். ‘லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி,  மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்காக உதவி செய்து வருகிறார். பட்டர்பிளை சர்க்கஸ் எனும் குறும்படத்தில் நடித்து,  அதற்காக சில விருதுகளும் வென்றுள்ளார். 2005-ம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியன் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “என்னுடைய வீட்டில் நான் எப்போதும் ஷூக்கள் வைத்திருப்பேன். எனக்கு ஆச்சரியங்களின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது” என்று சிரிக்கிறார் நிக்.

*ஆஸ்கர் பிஸ்டோரியஸ்..*

மாற்றுத்திறன் கொண்ட வீரர்கள் பாராலிம்பிக் போட்டிகளில் கலக்க,  இவரோ அதற்கும் ஒரு படி மேலே போனவர். மாற்றுத்திறன் கொண்டிருந்தாலும் சாதாரண சக வீரர்களோடு 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று,  உலகை வியப்பில் ஆழ்த்தினார். இரண்டு கால்களும் இல்லாமல் கார்பன் பிளேடு எனப்படும் செயற்கை காலின் உதவியோடு ஓடும் இவர்,  2011-ம் ஆண்டு உலக தடகளப் போட்டியில் 4x400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலகப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் மாற்றுத்திறன் கொண்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பாராலிம்பிக் போட்டிகளில் இவர் 1 வெண்கலம்,1 வெள்ளி மற்றும் 6 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். 2007ம் ஆண்டின் சிறந்த மனிதராக இவரை BBC தேர்வு செய்தது.

*அருநிமா சின்ஹா..*

இந்திய மூவர்ணக் கொடியை உலகின் மிக உயரத்தில் பறக்கவிட்டவர் இந்த கால் இழந்த சாதனைப் பெண். 2011ல் தொடர்வண்டியிலிருந்து சில திருடர்களால் வெளியே தூக்கி வீசப்பட்டார். மற்றொரு டிராக்கில் வந்த இன்னொரு ரயில் இவரது காலை நசுக்கியதில் தனது காலை இழந்தார் அருநிமா. தனது பிரச்சனையையே தனது பலமாகக் கருதிய இவர்,  2013-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நம் தேசியக் கொடியை நட்டு தேசத்திற்குப் பெருமை தேடித் தந்தார். உலகின்  மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய் மாற்றுத் திறனாளி இவர்தான். முன்னாள் தேசிய வாலிபால் மற்றும் கால்பந்து வீராங்கனையான இவர், புற்றுநோயிலிருந்து விடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கால்,  தான் மிகவும் ஊக்கம் பெற்றதாகக் கூறினார்.

இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல பலரும் தங்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்.  உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே செல்ஃபி எடுக்கச் செல்லலாம்.

மனமிருந்தால்..மார்க்கமுண்டு..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக