புதன், 30 ஆகஸ்ட், 2017

பாப்கார்னை டைம் பாஸ்க்காக சாப்பிட்டாலும் அதிலிருக்கும் நன்மைகள் தெரியுமா?



பாப்கார்னை டைம் பாஸ்க்காக சாப்பிட்டாலும் அதிலிருக்கும் நன்மைகள் தெரியுமா?

உலகம் எங்கிலும் மக்கள் பாப்கார்னை விரும்பி சுவைக்கின்றனர்.தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காக வரும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் பாப்கார்னை சுவைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பாபிகார்னை பொரித்து அப்படியே உண்ணும் வரையில் இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.
இதில் சீஸ்,வெண்ணை, உப்பு, மற்றும் வேறு பல சுவையூட்டிகள் சேர்க்கும்போது இவை ஒரு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவு ஆகிறது. பாப்கார்னை வெறும் சூட்டில் பொறிப்பது மட்டுமே போதுமானது. இதுவே ஆரோக்கியமானதும். ஆகையால் இதனை ஆலிவ் ஆயில் மற்றும் வேறு எண்ணெய் மூலம் பொரிப்பதை தவிர்த்திடுங்கள்.
பாப்கார்னில் நார்ச்சத்து,பாலிபீனாலிக் கூறுகள் வைட்டமின் பி காம்ப்லெஸ் , மாங்கனீசு , மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜென்னேற்றி .
பாப்கார்ன் என்பது ஒரு முழு தானியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மற்ற தானியங்களான அரிசி, கோதுமை போன்றவற்றின் குணநலன்களை பெற்றிருக்கும். பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். மென்மையான குடல் திசுக்கள் மற்றும் செரிமான புலன்களால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
தானியங்களின் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும் தமனியிலலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன்மூலம், இதய நோய், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கப்படுகிறது. இரத்த குழாய்களிலும் தமனிகளில் இரத்தம் சீராக பாய்வதால், இதயத்திற்கு எந்த வொரு அழுத்தமும் ஏற்படுவதில்லை.
நார்ச்சத்து மிகுந்த உணவின் மற்றொரு பயன்பாடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது. அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. இத்தகைய சிறப்பான நிர்வாகம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படும். ஆகையால் இந்த நார்ச்சத்து மிகுந்த உணவு நம் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று.
பாப்கார்னில் உள்ள அதிக ஆக்சிஜெனேற்றம் தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கே வியப்பை உண்டாக்கியது. பொதுவாக ஒரு ஜங்க் உணவாக கருதப்படும் இந்த பாப்கார்னின் ஓட்டில், அதிக அளவிலான போலிபீனாலிக் கூறுகள் காணப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
இது நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும். புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக்கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஒக்சிடண்ட்டின் பணியாகும். பாப்கார்ன் இந்த அபாயத்தை நிச்சயம் குறைக்கிறது.
பிரீ ரடிகல்ஸ் என்னும் அடிப்படை கூறுகள் புற்று நோய் போன்ற வேறு உபாதைகளையும் உடலுக்கு செய்கின்றன. தோல் சுருக்கங்கள்,தசைகள் வலிமையிழத்தல், குடல் பிரச்னை, கீல்வாதம், அல்சைமர், டிமென்ஷியா , முடி கொட்டுதல் போன்றவை இந்த அடிப்படைக்கூறுகளால் ஏற்படும் உபாதைகளாகும். பாப்கார்னில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இந்த கூறுகளை எதிர்த்து போராடுவதால் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடிகிறது.
ஒரு சராசரி அளவு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளை கிழங்கு சிப்ஸை காட்டிலும் 5 மடங்கு குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பக்கூடும்.
பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்காமல் தடுக்கிறது.இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம். இது ஒரு குறைந்த கொழுப்பு உணவாகவே கருதப்படுகிறது, மற்றும் இதில் இருக்கும் இயற்கையான எண்ணெய் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான எண்ணெய்தான் .
பாப்கார்ன் என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி தான்.ஆனால் அதில் உப்பு, வெண்ணை , சீஸ் போன்றவற்றை சேர்க்காமல் சுவைப்பது சிறந்தது.பதப்படுத்தப்பட்ட பாப்கார்னை உண்பது நல்ல விளைவுகளை கொடுக்காது. பாப்கார்னுடன் மற்ற பொருட்களை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நிறைந்துள்ள போலிபீனாலிக் கூறுகள் வலுவிழந்து விடுகின்றன. அதன் பிறகு இதுவும் மற்ற ஜங்க் உணவுகள் போல் தோற்றமளிக்கின்றன.

வாழ்க்கை துணைவி



 வாழ்க்கை துணைவி 

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

There is NO cancellation of GOOD and BAD deeds .

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

சோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்...



சோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்...

கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.
இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
நன்றாக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இந்த துண்டுகளைப் பலமுறை தண்ணீர் விட்டு கழுவவேண்டும். அவற்றின் வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும் அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.
வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
வயிற்றில் ரணம், மந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்துவர நல்ல முறையில் குணம் தெரியும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017


கணவனை தன் வசப்படுத்த பெண்கள் செய்யும் தந்திரங்கள்..

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்று தான் பெண்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். இந்த பகுதியில் கணவனின் அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

கணவன், மனைவி இருவரும் பிஸியான வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை. தினமும் உங்களது கணவரிடம் ஐ லவ் யு சொல்லுங்கள்…! அவருக்கு இது தன்னம்பிக்கையையும், உங்கள் மீதான காதலையும் அதிகரிக்கும்.

தினமும் உங்களது கணவர் அலுவலகத்திற்கு செல்லும் போது, ஒரு ஆசை முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். இது அவரது நாள் உற்சாகமாக அமையவும், அலுவலகத்தில் கூட உங்களை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கவும் உதவியாக இருக்கும்.

உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாக தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள்.

கணவரிடம் எங்க அம்மா வீட்டில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று பெருமையாக பேசாதீர்கள். பெறுமை பேசியே ஆக வேண்டும் என்றால், உங்கள் அம்மாவின் வீட்டில், என் கணவர் என்னை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்று தெரியுமா…? என்று பெருமை பேசுங்கள். இதுவரை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட, இதை கேட்டதும் உங்களை ராணி மாதிரி வைத்து பார்த்துக்கொள்வார்.

உங்கள் கணவரிடம் குழந்தை தனமாக பேசுங்கள்.. விளையாடுங்கள்.. நீங்கள் இவ்வாறு செய்தால் அவர் அத்தனை பிரச்சனைகளையும் மறந்து, குஷியாகிவிடுவார். அவரது மன இறுக்கம் குறையும்.

உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களை பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாக கூறி புரிய வையுங்கள். சட்டென குறை கூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையும். மென்மையாக கூறினால், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.

சண்டை இல்லாத குடும்பமே இல்லை.. எனவே உங்களுடன் கணவர் சண்டையிட்டுவிட்டால், அதையே மனதில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு வழக்கம் போல இருங்கள். கட்டிப்பிடி வைத்தியம்! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு அதிக பலன் உண்டு. எனவே உங்களது கணவரை அடிக்கடி ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். இது உங்களது உறவுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்.

பல் வலியா ?


பல் வலியா ?

  நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் காரணம் என்ன?

 குறித்த கால கட்டத்தில் தானாக முளைத்து தானாக விழும்படி படைப்பின் சூட்சுமம் அமைந்திருந்ததெல்லாம் ஒருகாலம். காலத்தின் வேகமும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தீவிரமும், மருத்துவத்தின் மேம்பாடும் பெருகிவிட்ட இக்காலத்தில் கடைவாய்ப் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர், முன் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர் என்றும் வந்துவிட சாத்தியங்கள் தெரிகிறது.

 இருந்தும் பற்களைக் கிருமிகள் தாக்குவதாயிருக்கட்டும், ஈறுகள் வீங்கி ‘விண் விண்' என்று வலி கொடுப்பதாயிருக்கட்டும், இவையெல்லாம் இரவிலும் குளிர்காலத்திலுமே அதிகமாக துன்புறுத்துவதாய் இருக்கட்டும்... மாறவேயில்லை.

 முளைக்காத பல்லை முளைக்கச் செய்யவும், ஏறுமாறாய் முளைத்தவற்றை சீராக்கவும், பெரிதை சிறிதாக்கவும், பற்களுக்கிடையே இடைவெளி அதிகமென்றால் சரிசெய்யவும் தேர்ந்த வல்லுநர்களை அணுக சாவகாசமாய் நமக்கும் நேரம் ஒத்துவரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

 ஆனால், திடுதிப்பென வந்து படுக்கையில் தலைசாய்க்க விடாமல் நரம்பு மண்டலம் முழுக்க வலி தெறிக்க, தடுமாறும் போது கைகொடுக்கத் தான் எத்தனையெத்தனை கைவைத்தியங்கள்!

 சேகரித்தவற்றைப் பகிர்கிறேன்...

 பல்வலியென்பது பல் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்று, பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம்!

 Periodontitis எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்குகிறதாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு. மேலும், அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள் கூடக் காரணமாகலாமாம். ஸ்டெம் செல் உதவியுடன் டைடானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது என்று படிக்கும் போது வியப்பால் பிளக்கிறது நம் வாய்.

 குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம் வாய்ப்பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்குமாம். அதிகபட்ச ஃப்ளூரைடு பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்குமாம்!

 கிருமிகள் நீங்க, உடற்சூடு தணிய, வாய்ப்புண்களைத் தடுக்க செக்கில் ஆட்டிய நல்லெண்ணைய் ஒரு கரண்டி எடுத்து காலை பல் துலக்கியபின் வாயிலிட்டு கொப்பளித்து நுரைத்தபின் உமிழ்தல் சிறந்த பலன் தருவதாய் உள்ளதாம்.

 ஆலும் வேலும் பல்லுக்குறுதி என அந்தக்கால மனிதர்கள் பற்களை பராமரித்திருக்க, பலவித பற்பொடிகளும் பற்பசைகளும் சூழ்ந்திருக்க நாமெல்லாம் தான் நடுத்தர வயதுக்குள் பல் பிரச்சினைகளுக்காக வைத்தியம் தேடி அலைகிறோம்.

ஆலங்குச்சியால் பல் துலக்கினால் குளிர்ச்சியாம். இலந்தைக் குச்சியால் பல் விளக்க இனிய குரல்வளம் வருமாம். இத்தி மரக்குச்சி விருத்தி தருமாம். இலுப்பைக் குச்சி திடமான செவித்திறன் தருமாம். நாயுருவிச் செடியின் வேரால் பல்துலக்க புத்தி கூர்மை மற்றும் தைரியம் மிகுமாம். மருதமரக் குச்சியால் பல் துலக்க நரை குறைவதோடு ஆயுள் நீடிக்குமாம். உகா மரம் என்கிற குன்னி மரக்குச்சி தான் (மெஸ்வாக்) திருக்குர் ஆனில் சொல்லப் பட்ட பல்துலக்கியாம். கருப்பு பூலா கொடி வேரினால் பல் துலக்க ஆண்மை பெருகுமாம்.

 போகட்டும். இவையெல்லாம் நம்மில் பலருக்கு அடையாளம் கூடத் தெரிய வாய்ப்பில்லை.

 நினைவு தெரிந்த நாள் முதல் பல் வலிக்கு முதல் வைத்தியம் கல் உப்பு போட்ட வெந்நீரால் கொப்பளிப்பது. அடுத்து, லவங்கத் தைலம் பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்துவது. பிறகு சில கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு வெதுவெதுப்பாகக் கொப்பளிப்பது. கற்பூரம் வைப்பது. ஈறுகளில் வீக்கம் வலியென்றால், அருநெல்லிக்காயளவு புளியுடன் கல் உப்பு சிறிது சேர்த்துப் பிசைந்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வரும் உமிழ்நீரை துப்புவது. சமீபத்தில் மனோ அக்கா சொன்னது போல் ஒரு துண்டு உப்பு நாரத்தையை வலியுள்ள பக்கம் அடக்கிக் கொள்வது.


 சமீபத்தில் வந்த பல்வலியால் கிடைத்த அனுபவங்களாக கேட்டதும் படித்ததும் ஆன பட்டியல் இதோ:

* மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.

* ஈறுகளில் வீக்கம் மற்றும்  வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.

* பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று திண்ணவும்.

* சுத்தமான தேனை விரலால் ஈறுகளில் தினம் தடவ, வீக்கம் குறையும்.

* 2 வெங்காயம் நறுக்கி 2 ஸ்பூன் சர்க்கரையுடன் உண்க.

* மாந்தளிர் இலைச் சாறு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.

* பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.

* ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.

* ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொறற்¢லிருந்து விடுபடலாம்.

* கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும்.

* நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.

*ஓமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.

*ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.

* கோதுமைப்புல் சாறு அருந்திவர பல்வலி குறையும்.

* நெல்லிக்காய், பால், வெண்ணெய் போன்ற கால்ஷியம் மிகுந்த உணவு வகைகளை மிகுதியும் சேர்த்துக் கொள்ளவும்.

*இஞ்சிச்சாறை இலேசாக சூடாக்கி வாய் கொப்பளிக்கவும்.

* தான்றிக்காயைச் சுட்டு அதன் மேல் தோலைப் பொடித்து அதன் எடைக்குச் சமமாக சர்க்கரை கலந்து தினசரி காலை வெந்நீருடன் சாப்பிட பல் வலி, ஈறு நோய்கள் குணமாகும்.

* நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியைக் கொண்டு பல்விளக்கலாம்.

* பனங்கிழங்கை குப்பைமேனிச் சாற்றில் அரைத்து ந.எண்ணெயில் காய்ச்சி உபயோகிக்க பல்வலி குறையும்.

* கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்துக் கொப்பளிக்கவும்.

* சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கவும்.

*மகிழ மரப் பட்டையைப் பொடியாக்கி விளக்கலாம்.

*வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.

* கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.

* மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.

* அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.

* கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும்.

* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.

* ஆலம்பூ மொட்டினை வாயில் அடக்க பல்வலி போகும்.

* அருகம் புல்லை நன்கு மென்று வலி உள்ள பக்கம் அடக்கி வைக்கவும்.

* கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஈறில் தடவவும்.

* துத்தி இலை மற்றும் வேர்க் கசாயம் வாய் கொப்பளிக்கவும்.

* மாம்பூக்களை வாயிலிட்டு மெல்லவும்.
* கருஞ்சீரகத்தை வினிகரில் வேக வைத்துக் கொப்பளித்தால் பல்வலி தீரும்.

* கண்டங்கத்திரி விதையை நெருப்பில் சுட்டு வரும் புகையை பற்கள் மேல் படும்படி செய்ய வலி தீரும். பழத்தை உலர்த்திப் பொடித்து நெருப்பில் போட வரும் புகை, பல்வலி, பல் கிருமிகளைப் போக்கும்.

* பாகல் இலையை நன்றாக மென்று தின்றால் பல்வலி குணமாகும்.

* வலிக்கும் பக்கம் வாயினுள் சிறிது அச்சு வெல்லம் அடக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூளை (18 மிளகு) கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில்  வலிக்கும் பக்கம் கன்னப் பகுதியில் தேய்க்க வலி மறையும்.

* உப்பை நன்கு வறுத்து அதை சிறு துணியில் மூட்டை போல் கட்டி சூட்டுடன் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இவ்வளவு குறிப்புகளில் ஒன்று கூட பலனில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் பல் வைத்தியர்! பணக்கட்டுடன் கிளம்பலாம். ஆனால் இவ்வளவு குறிப்புகளும் தேய்க்கவோ உள்ளுக்கு சாப்பிடவோ சொல்ல, கீழ்க்கண்ட குறிப்பைப் படித்த போது நான் எப்படியாகியிருப்பேன் என நீங்கள் படிக்கும் போது உணரலாம்.

  பல் வலித்தால் அன்று காலை கீழாநெல்லிச் செடியொன்றை வேருடன் பிடுங்கி தலைகீழாக (வேர் மேலும், இலைப்பகுதி கீழுமாக) நட்டு வைத்து மாலை அதை மீண்டும் நேராக (வேர் மண்ணிலும், இலைப்பகுதி மேலுமாக) நட பல்வலி குணமாகும். இது ‘மூலிகை ஜால ரத்தினம்' என்ற நூலில் காணப்படும் குறிப்பாம்!


பல் நோய்  பல்பொடி!

பல்லில் வந்தால் அம்மாடி தாங்காதுடி! எதையும் சாப்பிட முடியாது. ஐஸ் சாப்பிட முடியாது. கூச்சம் பல்லில் இருந்தால் தண்ணீர் கூட குடிக்க முடியாது.
மிருதுவான ஈறுகளையும், வாய்ப்புண்ணும் உடையவர்கள் வேப்பங்கொழுந்து அல்லது திரிபலாப் பொடியால் பல் துலக்க வேண்டும்.
ஜுரம், காசம், வாந்தி, தலைவலி மார்வலி உள்ளவர்கள் ஓமத்தை பொன்னிறமாக வறுத்து சூரணஞ் செய்து அதனுடன் உப்பு, காசுக்கட்டி, மாசிக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கம், மிளகு இவைகளின் சூரணத்தை சம அளவு கலந்து பல் தேய்க்கலாம்.
மேற்கண்ட வழிமுறைகளில் நமது பல்லை நாமும் பாதுகாத்து நலமுடன் வாழலாம்.
இது சித்தர் மருத்துவம்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்...



பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்...

பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். உங்கள் மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)

மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)

சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)

சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.

வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)

சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.


கருக்கலைதல் (Miscarriage) கவலை

சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.

துர்நாற்றமா? கவனம் தேவை!

மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

உறவுக்குப் பின் உதிரம்

சிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.

மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு

மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

'ஆறில் ஆரோக்கியம்'..!!



'ஆறில் ஆரோக்கியம்'..!!

ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்கு தான் எத்தனை எத்தனை நோய்கள்..!!

இந்த 'ஆறு'-ல் அக்கறை எடுத்துக் கொண்டால், நம் வாழ்வில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது என்றால் நம்ப முடிகிறதா?

எந்த ஆறு..?? வாங்க பார்க்கலாம்..

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன நிம்மதி

பசி:

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா! பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்..

"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்."

நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.

"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்."

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.

இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

தாகம்:

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. AC யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

RO, Mineral, Filter Water பேராபத்து !

இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும்.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே" என்பார்கள்.

நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.

உடல் உழைப்பு:

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் Walking, Yoga, Gym இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத் துணையின்றி செய்தாலே போதுமானது.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

தூக்கம்:

யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9 மணிக்கு உறக்கச் சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

ஓய்வு:

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.

உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

மன நிம்மதி:

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலையை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால், நீங்கள் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிடுவீர்கள் !

அதன் பிறகு அந்த எமன் கூட உங்களை கண்டு அஞ்சுவார்.

ஆறு படிகளைக் கடப்போம் !
ஆரோக்கியத்தை அடைவோம் !

வாழ்க நலமுடன்..!

சளி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?



சளி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?

சளி என்றதுமே “ச்சீ” என்று முகம் சுழிப்போம், ஆனால் அதன் உண்மையான பலன்கள் உங்களுக்கு தெரியுமா?
நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளே அதை போலத்தான் சளியும்.
நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும்.

சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக Antibodies, நொதிகள் (enzymes ), புரதங்கள் (Protein ) , பல்வேறு உயிரணுக்கள் (Cells ) நிறைந்து இருக்கின்றன.
இயற்கையாக விளைந்த பொருட்கள் ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு.
ஆனால் ரசாயன பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் சளியாக உருமாறுகிறது.
அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும்.
ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம்.
இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.
இதை நம் உடலில் இருந்து வெளியேற்றவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன.
இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவுகள் தான்.
இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும்.

*உடல் சூட்டால் உருவாகும் சளி*

உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும்.
அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது.

அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும்.
இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

 *உடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி*

பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும்.
இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித ரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறிவிடும்.

சளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்ககூடாது!!!

சனி, 26 ஆகஸ்ட், 2017

தவணை முறையில் வீட்டு மனை வாங்கும்போது, என்ன கவனிக்க வேண்டும் ?



தவணை முறையில் வீட்டு மனை வாங்கும்போது, என்ன கவனிக்க வேண்டும் ?

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து மொத்தத் தொகையாக கொடுத்து நிலமோ, வீடோ வாங்கலாம் என நினைப்பவர்கள் குறைவு. ஏனெனில் ஏதாவதொரு வழியில் சிறுக சிறுக சேர்க்கிற பணம் செலவாகிக் கொண்டேயிருக்கும். அதனால் தவணை முறையில் நிலத்தையோ, வீட்டையோ வாங்க நினைப்பவர்களே அதிகம். தவணை முறையில் வீடு வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

இப்படி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

• தவணைமுறையில் மனை வாங்கும்போது முதலில் இடத்தை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
• இடத்திற்கான பத்திரத்தை வைத்து மட்டும் முடிவு செய்துவிடாமல், தாய்ப்பத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
• தாய்ப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரிசுகள் அனைவரும் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதைக் கவனிக்கவேண்டும்.
• பட்டா, வில்லங்க சான்றிதழ், வரி ரசீதுகள் இவற்றையும் சரிபார்க்கவேண்டும்.
• குறிப்பிட்ட மனை அல்லது நிலத்தின் பத்திரம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா? பத்திரங்களில் உள்ள நிலஅளவுகள் சரியாக இருக்கின்றனவா? அந்த பகுதியின் (ஊராட்சி/நகராட்சி/பேரூராட்சி/ மாநகராட்சி)அனுமதிப் பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
• விளம்பரங்களை அப்படியே நம்பிவிடாமல் மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்த்துக் கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம்.
• பத்திரப்பதிவு இலவசம், சலுகை விலை, சிறப்புப் பரிசு, இலவசச் சுற்றுலா போன்ற விளம்பர வார்த்தைகளை நம்பி நிலம்/வீடு இவற்றை வாங்கக் கூடாது. அந்த பகுதியின் விலை நிலவரம், உள்கட்டமைப்பு வசதிகள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
• முதலில் ஒரு தெளிவான ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி அதை பதிவு செய்துகொள்வது அவசியம்.
• வாங்குகிற இடம் முன்னர் விவசாய நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
• புறம்போக்கு, கண்மாய், குளம், பிறருக்குச் சொந்தமான நிலங்கள் இவற்றையும் கூட விற்பனை செய்து ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். ஏமாறாமல் இருக்க ஒப்பந்தம் போட்டுக் கொள்வதும், ஆவணங்களை சரிபார்ப்பதும் அவசியம்.
• முதலீடு நோக்கத்திலோ அல்லது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டோ வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் அந்த இடத்தின் அருகில் தற்போதைய வளர்ச்சி எப்படி இருக்கிறது? குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளியில் வளர்ச்சி எப்படி இருக்கும்? விரைவில் வளர்ச்சி அடையுமா? போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒப்பந்தம் செய்யும்போது
• ஒப்பந்தத்தில் விலை எவ்வளவு? மாதத் தவணை செலுத்த வேண்டியது எவ்வளவு? எத்தனை மாதங்கள் செலுத்த வேண்டும்? இவற்றைக் குறிப்பிட வேண்டும்.
• மனை எண், மனையின் பரப்பளவு எவ்வளவு? என்பதைக் குறிப்பிட வேண்டும்.
• ஒருவேளை கிரையம் செய்யத் தாமதமானால் அத்தனை நாட்களுக்குண்டான வட்டியைத் தரவேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
• ஒருவேளை இரண்டு வருடம் தவணை செலுத்தி அது முடியும் தருவாயில் அந்த இடத்தின் விலை கூடியிருந்தால் அதிகப் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்தலாம். இதனையும் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

பணம் செலுத்தும் போது:
தவணை முறையில் பணம் செலுத்தும்போது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளுமாறு இ.எம்.ஐ வசதியைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தப்படுவதோடு, பணம் யாருக்கு செலுத்தப்படுகிறது என்ற விவரங்களையும் வங்கிக் கணக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மொத்தமாகப் பணம் செலுத்தும் பட்சத்திலும்கூட காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ செலுத்தவும். அதன் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைக்கவும்.

வீடு வாங்கும்போது தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்:
• வீடு வாங்கும்போதும் நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக சில விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
• புரமோட்டர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி?
• பவர் ஆஃப் அட்டானி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இடையில் இரத்து செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை பவர் ஆஃப் அட்டானி கொடுத்தவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
• பதிவு அலுவலகத்திற்கு சென்று பட்டா, சிட்டா, புல வரைபடம், ’அ’ பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். இந்த ஆவணங்களின் ஒளிநகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
• விற்பவர் அந்த நிலத்தின் உரிமையாளரா? சொந்தமாக விற்கிறாரா? அல்லது விற்பனை உரிமை பெற்றவரா? விற்பனை உரிமை பெற்றதின் ஒப்பந்தம் ஆகியவற்றை அறிந்து கொள்வது கட்டாயம்.

தவணை முறையில் வீட்டுமனை வாங்குவோருக்கான எச்சரிக்கை

பெரும்பாலும், ஐந்து ஏக்கரில் பிளாட் போடுவதாக அறிவித்தால், இரண்டு ஏக்கர் மட்டுமே, கிரையம் செலுத்தி வாங்கிவிட்டு, மீத தொகையை, அட்வான்ஸ் போட்டு வைத்து கொள்வார்கள், நம்மிடம் தவணை முறையில் விற்பவர்கள். நம்மிடம், மாதா மாதம் தொகை வாங்கியே, நிலத்தின் உரிமையாளருக்கு செலுத்துகிறார்கள். இது தவிர, agent மூலம் பணம் கட்டும்போது எச்சரிக்கையாக இருக்காவிட்டால், அவர், தவணை scheme போடுபவரிடம், நம் பணத்தை ஒப்படைக்கிறாரா என்று சரி பார்த்து கொள்வது நல்லது.

தவணை முறையில் வீட்டு மனை எனும் பெயரில் ஒரே நிலத்தையே இரண்டு பேருக்கு அல்லது பலருக்கு விற்கிற மோசடிகளும் நடக்கின்றன. தாய்ப்பத்திரம், பத்திரம், பட்டா எல்லாம் சரியாக இருக்கும். தவணை முடிந்த பிறகுதானே பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்படும். அப்போது இன்னொருவரும் அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடுவார். இதுபோன்ற நேரங்களில் ஆரம்பத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் உங்களுக்குக் கைகொடுக்கும். இதன்மூலம் ஒருவருக்கு மனையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கட்டியபணத்தைத் தருவதாக சொல்லிவிடுவார்கள். இதனால் இரண்டு மூன்று வருடம் பணம் கட்டி காத்திருந்த கனவு கலைந்துபோவதும் உண்டு. தவணை முறையில் வாங்குவதைவிட மொத்தத் தொகை செலுத்தி வாங்குவதே நல்லது. அதையும் வங்கிக் கணக்கின் மூலம் செலுத்துவது சிறந்தது. அல்லது தவணை முறையில் ஆரம்பித்து, இடையில் காஷ் பிளாட் என்று போட்டால் அதை வாங்கி, மீத தவணையை மட்டும் உடனே கட்டி வாங்கி விடுங்கள்.


வியாழன், 24 ஆகஸ்ட், 2017

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்



கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்
கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

• கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

• அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

• மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

• பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

குற்றாலம் - எங்கே கிடைக்கும் இந்த சுகம்!*


குற்றாலம் - எங்கே கிடைக்கும் இந்த சுகம்!*

‘தென்இந்தியாவின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது.
மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.
இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி. பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் சிறுவர்களுக்கான பூங்காக்களும் நிறைய உள்ளன.
குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும். இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.
இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது. சிவன் கைலாசமலையில் நடைபெறும் தனது திருகல்யானத்திற்கு செல்வதற்காக தெற்கில் முண்டியடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப்படுகிறது.
குற்றாலத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
குற்றாலத்தை அடைவது எப்படி?

சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும்.
குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும். சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.
குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம்

குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும். கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும்.
பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச்சாரலும், இதமான காற்றும் இந்த காலகட்டத்தில் இந்நகரை சுற்றிப்பார்பதற்கு மேலும் வசீகரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்



ஆண்ட்ராய்டு ஓரியோ என்றால் என்ன ? அதன் சிறப்புகளை அறிவோம்

பல மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் ஆண்ட்ராய்டு ஓரியோ அல்லது ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தின் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றதாக ஆண்ட்ராய்டு ஓரியோ பெற்றுள்ளது.



ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓ என அறியப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓ என்றால் ஓரியோ என அதிகார்வப்பூர்வமாக கூகுள் நேற்றைய முழு சூரிய கிரகணத்தின் போது டெக் ஜாம்பவான் கூகுள் வெளியிட்டுள்ளது.



ஓரியோ இயங்குதளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பற்றி தொடர்ந்து காணலாம்.

1. பாதுகாப்பான ஆண்ட்ராய்டு

முந்தைய பதிப்புகளில் இருந்து முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இயங்குதளமாக ஆண்டராய்டு ஓரியோ மிகுந்த பாதுகாப்பு தன்மையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2. பிக்சர் இன் பிக்சர் மோட்

ஒரு ஆப் பயன்பாட்டில் உள்ள போது அதே திரையில் வீடியோ கால் அல்லது மற்ற ஆப்கள் என இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.



3. ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்ஷன்

மிக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு திறனை இலகுவாக பயன்படுத்தும் வகையில் நாம் எந்த மாதிரியான ஸ்மார்ட் டெக்ஸ்ட் காப்பி செய்வதற்கு ஏற்ப அதன் சார்ந்த சேவைகளை பெற மிக வேகமாக செயல்படும். குறிப்பாக முகவரியை காப்பி செய்தால், அதைத்தேடுவதற்கு வசதியாக உடனடியாக கூகுள் மேப்ஸ் தோன்றும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



4. நோட்டிஃபிகேஷன் டாட்

ஜிமெயில் உள்ளிட்ட ஆப்களில் அறிவிப்புகளை புள்ளி வடிவில் பெறும் வகையிலான அறிவிப்புகளுக்கு டாட்ஸ் போன்ற மிக எளிமையாக வழங்கியிருக்கின்றது.



5. ஸ்மார்ட் ஷேரிங்

பயனாளர்கள் விரும்பும் வகையில் பகிரும் அம்சத்தை செயல்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் பெற்றுள்ளது. அதாவது புகைப்படங்கள் மற்றும் காணொலி போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

6. பேட்டரி பெர்ஃபாமென்ஸ்

பாதுகாப்பு மட்டுமல்லாமல் மிக சிறப்பான வகையில் பேட்டரியின் ஆற்றலை சேமிப்பதற்கு பின்புலத்தில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. ஆடாப்டிவ் ஐகான்ஸ்

ஐகான்களை விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர் வழங்கப்பட்டுள்ளது.



8. புதிய எமோஜிக்கள்

புதுவிதமான வடிவமைப்பில் எமோஜிக்களை ஐகான் வெளியிட்டுள்ளது.



புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தினை பெற்ற கூகுள் பிக்சல் , பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 6P, நெக்ஸஸ் 5X மற்றும் பிக்சல் சி ஆகிய மொபைல்களில் வெளியாக உள்ளது

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வயிற்றுவலி வேதனை தீர எளிய சிகிச்சை முறைகள்..



வயிற்றுவலி வேதனை தீர எளிய சிகிச்சை முறைகள்..

மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும்  உணவு, பருகும் நீர்,  இவற்றை செரிமானம் செய்யக்கூடிய  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல  உறுப்புகள் அடங்கியுள்ளது.

வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது தாங்க முடியாதது. இதற்கு வயது  வித்தியாசம் எல்லாம் கிடையது. இந்த வயிற்று வலிக்கான காரணம் என்ன? இதை தவிர்ப்பது எப்படி, இதற்கான சிகிச்சைகள் என்ன? அதுபற்றிய விவரங்கள்:

வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை,  குடல் அழற்சி, குடல் வால்  அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள்  போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படலம்.

வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வலி வரலாம்.

குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள்,  தொடர் கணைய  அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும்

புண்ணும்  (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உணவுக்குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும்.

 அதேபோல் அடி வயிற்றில் வலி  ஏற்பட்டால் குடல் பிரச்னை  குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக்கட்டியாக இருக்கக்கூடும். பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு காரணம் புற்று நோயாக இருக்கக்கூடும். இதனால் மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப்  பெருக்கம் போன்ற பல  பிரச்னைகள் ஏற்படலாம்.


அல்சர் உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். இவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். அதிகமான கவலை, மன உளைச்சல், உணர்ச்சி வேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன.

 இந்த அமிலங்களின்  தாக்கத்தால்தான்  பெரும்பாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகிறது.



அறிகுறி: வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவை இருக்கலாம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால்,  குடலில் புண் (அதிக  வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி  ஆகும்.

 மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது  அடிவயிற்றில் கடுமையான வலி  ஏற்படும். ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே  தங்கிவிடுகின்றன.

உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல்  இருக்கும். இதற்கு உண்மைய £ன காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால்தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு  போன்றவை ஏற்படுகிறது. காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.

வயிற்று வலியை தவிர்க்க

*  ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாது.

* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக  சாப்பிட்டால் உடலில் உள்ள  செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.

* உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வயிற்று நோயும், தேனின் பயனும்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

உள்ளாடை சுத்தம் அறிவோம் !!


உள்ளாடை சுத்தம் அறிவோம் !!


தோல் மருத்துவர்களிடம் செல்லும் நோயாளிகளில் கணிசமானவர்களுக்குப் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணமே சுத்தமற்ற உள்ளாடைகள்தான்.

சாதாரணமான உள்ளாடையில், தொடைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையே போதிய காற்று வசதி இருக்காது.

இதனால், இடுக்குகளில் வியர்வை படிந்து, தோல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பாக்ஸர்  ஷார்ட்ஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்.

இறுக்கமான உடைகளை அணிவதால்,  தோல் சிவத்தல், தோல் எரிச்சல், உள்ளாடை அச்சுப்பதிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

ஒரு நாளைக்கு உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதைத்தான் மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள்.

இரவு, படுக்கைக்குச் செல்லும்போது, உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

மற்ற உடைகளுடன் சேர்த்து உள்ளாடையை ஊறவைத்துத் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஈரமான உள்ளாடையை எந்தக் காரணம் கொண்டும் அணியக் கூடாது. உள்ளாடைகளைக் கட்டாயம் வெயிலில்தான் உலர்த்த வேண்டும்.

அல்லது நிழலில் உலர்த்தி, அயர்ன்பாக்ஸ் கொண்டு மென்மையாக அயர்ன் செய்தால், கிருமிகள் நீங்கும்.

இன்னொருவர் உள்ளாடைகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். இதனால், இருவருக்குமே தோல் பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு.

குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் ஈரமான உள்ளாடையைப் பல மணி நேரங்கள் அணிவதால், ‘இன்டெர்ட்ரிகோ’ (Intertrigo) குளிர் காலத்தைவிட கோடை காலத்தில் அதிக வியர்வை படிவதால் எனும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக, ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு உள்ளாடை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சிந்தடிக், நைலான்  உள்ளாடைகளைத் தவிர்த்து, தரமான பருத்தி உள்ளாடைகளை அணிவது நல்லது.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...சென்னைக்கு...இன்று 378வது பிறந்த தினம்...ஆகஸ்ட் 22.



மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...சென்னைக்கு...இன்று 378வது பிறந்த தினம்...ஆகஸ்ட் 22.

22/08/17 செவ்வாய்க்கிழமை!

மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

 வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

தாமல் குறுநில மன்னர்கள் வன்னியர் வகுப்பினர் ஆவர்.

காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் கிராமத்தில் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பவர்கள் வன்னிய நாயக்கர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது

தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்....ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !!!


தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்....ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !!!

ராதேக்ருஷ்ணா தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் !

உலகின் மிக உயர்ந்த ஒரு தெய்வானுக்ரஹம்
தாம்பத்யம் ! பகவானும்,தாயாரும் கூட  திவ்ய தம்பதிகளாகவே
காட்சி தருகின்றனர் ! தாம்பத்தியத்தினால்தான் உலகில் சந்ததி உண்டாகிறது ! ப்ரும்மசரியத்தைக் காட்டிலும், வானப்ரஸ்தத்தைக் காட்டிலும், சன்யாசத்தைக் காட்டிலும், க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது ! தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை உணரவேண்டும் ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் பரமானந்தமே ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் தெய்வ தரிசனமே ! தாம்பத்தியத்தை நல்லபடி நடத்தினால் வீட்டிலேயே தெய்வத்தைப் பார்க்கலாம் . . .

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

 தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் . . . அவரவர் ப்ராரப்தத்திற்கு தகுந்தவாறே கணவனும், மனைவியும் அமைகின்றனர் ! ஆனால் உன்னதமான பக்தியினால் பூர்வ ஜன்ம கர்ம வினையை மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் !

எது எப்படியோ உனக்கென்று ஒரு வாழ்க்கையை பகவான் கொடுத்திருக்கிறான் ! அதை முதலில் புரிந்துகொள் !

உலகில் கல்யாணம் என்கின்ற ஒன்று நடக்காமல் பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !

கல்யாணம் ஆனபிறகும் தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
பல கோடி உண்டு !

இருப்பதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டியது
மனித தர்மம் . . .

1. கணவனை மனைவி க்ருஷ்ணனின் ப்ரசாதமாக நினைக்க வேண்டும் ! மனைவியை கணவன் க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் !

2. கணவனிடத்தில் உள்ள உயர்ந்த குணங்களை மனைவி
புரிந்துகொள்ள வேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
பண்புகளை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும் !

3. கணவனிடத்தில் உள்ள குறைகளை மனைவி தெரிந்துகொண்டு அதை மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள குறைகளை கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
அவளை மீட்கவேண்டும் !

4. கணவன் மனைவியை அடுத்தவர் முன் அவமானப்படுத்தவே கூடாது ! மனைவி கணவனைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்
கேவலமாகப் பேசவே கூடாது !

5. கணவன் குடும்பத்திற்கு வேண்டியதை சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் ! மனைவி கணவனின் சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி குடும்பத்தை நடத்தவேண்டும் !

6. கணவனை மனைவி ஆத்மாவாக பார்க்கவேண்டும் ! மனைவியை கணவன் ஆத்மாவாக உணரவேண்டும் !

7. கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி என்றுமே
உறுதுணையாக இருக்க வேண்டும் ! கணவன் என்றுமே
மனைவியை தர்மகாரியங்களில் ஈடுபடுத்தவேண்டும் !

8. எந்த ஒரு நிலைமையிலும், கணவன் மனைவியை அடிமையாக நினைக்கவே கூடாது ! எந்த ஒரு அவசரத்திலும், மனைவி கணவனை கேவலமாக நினைக்கவே கூடாது !

9. கணவனிடத்தில் மனைவி எப்பொழுதும் உண்மையாகவே
இருக்கவேண்டும் ! மனைவியிடத்தில் கணவன்
எப்பொழுதும் ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் !

10. கணவனின் பலம்,பலவீனம்,தேவை,  ஆகியவற்றை மனைவி
நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் ! மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள் ஆகியவற்றிற்கு கணவன்
மரியாதை அளிக்கவேண்டும் !

11. மனைவியை கணவன் காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் ! கணவனை மனைவி தன் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும் !

12. மனைவியின் முட்டாள்தனங்களையோ, குறைகளையோ,உடல் அழகைப்பற்றியோ, தவறுகளையோ, கணவன் மறந்தும்
அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது ! கணவனின் அசட்டுத்தனங்களையோ, நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ, மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
கலந்து பேசவே கூடாது !

13. எந்த சமயத்திலும் கணவன் மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
என்று தீர்மானிக்கவே கூடாது ! மனைவி எந்த நிலைமையிலும்
கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ, விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !

14. ஒரு பொழுதுகூட மனைவி, இவனை கணவனாக அடைந்துவிட்டோமே என்று நினைக்கவே கூடாது ! ஒரு தடவை கூட,கணவன், இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !

15. என்றும் மனைவி அடுத்தவரின் கணவரோடு தன் கணவனை
ஒப்பிட்டு நினைக்கவே கூடாது ! என்றும் கணவன் மற்றவரின்
மனைவியை, தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !

16. கணவனின் குடும்பத்தை மனைவி தன் குடும்பமாக
பாவித்து சேவை செய்யவேண்டும் ! மனைவியின் குடும்பத்தை
கணவன் தன்னுடையவர்களாகக் கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !

16. மனைவியின் உடல்நலத்தில் கணவன் என்றுமே அக்கரை உடையவனாக இருக்கவேண்டும் ! கணவனின் உடல்நலத்தில் மனைவி எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் !

17. மனைவியானவள் கணவன் சொல்வதை
சரியாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும்.
கணவனானவன் மனைவி சொல்லும் காரியங்களில் யோசனை செய்து, தகுந்தபடி செயல்படவேண்டும் .

18. மனைவி கணவனுக்கு ஒரு உத்தமமான மந்திரியைப் போல்
ஆலோசனை சொல்லவேண்டும் . கணவன் மனைவியை ஒரு தோழியாக, நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து
அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !

19. என்றுமே மனைவி மலர்ச்சியான முகத்தோடு கணவனுக்கு பணிவிடை செய்யவேண்டும் ! என்றுமே கணவன் ஆனந்தமான
வார்த்தைகளால் மனைவிக்கு அன்பைத் தரவேண்டும் !

20. கணவன் மனைவியின் உடல் தேவைகளை புரிந்துகொண்டு
அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும் ! மனைவி கணவனின் சுகத்திற்குத் தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டுg
ஆனந்தத்தைத் தர வேண்டும் !

21. கணவன், மனைவியின் குறைகளை பெரிதாக நினைக்காமல், அவளுடைய உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !
மனைவி, கணவனின் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !

22. கணவன் கோபப்படுகின்ற சமயத்தில் மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் ! மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !

23. கணவனின் தோல்விகளில் மனைவி தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன் வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !
மனைவியின் அவமானங்களில் கணவன், அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய துக்கத்தை அழிக்கவேண்டும் !

24. கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும் மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் ! மனைவியின் நியாயமான தேவைகளை
பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக் கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !

25. கணவனின் அழகிலோ,குணத்திலோ, அறிவிலோ, மனைவி ஒரு நாளும் அகம்பாவம் கொள்ளவே கூடாது ! மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ, நல்ல குணங்களிலோ, கணவன் எந்த ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !

இதில் சொன்னதை கடைபிடித்துப் பாருங்கள் ! உங்கள் தாம்பத்தியமும் சிறக்கும் !

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பெண்கள் கருப்பை- சுகபிரசவம்



பெண்கள் கருப்பை- சுகபிரசவம்
         
கருப்பை பலமடைய:- சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்

கருவுற்ற தாய்மார்கள்:- கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம்

சுகபிரசவம் ஆக:- ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து இரண்டு கிராம் அளவு சாப்பிடலாம்

கர்பாயாச கோளாறு நீங்க:- சிறுகுறிஞ்சா இலை, களா இலை அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்

கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க:- அசோகப்பட்டை, மாதுளை வேர், மாதுளை தூள் பொடி செய்து மூன்று சிட்டிகை மூன்று வேலை சாப்பிடவும்


குழந்தையின்மை நீங்க :- பெண்கள் வேப்பம்பூவுடன் மிளகு சேர்த்து பௌடராக்கி சாப்பிட்டு வரலாம்.

கருப்பை குறைபாடுகள் நீங்க:- பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்

கர்பப்பை புழு நீங்க:-  மாதவிடாய் முதல் மூன்று நாட்கள் வெள்ளருகு சமூலத்தை அரைத்து இரண்டு கிராம் சாப்பிடலாம்

குழந்தை சிவப்பாக பிறக்க:- கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.

பிள்ளை பேரு உண்டாக:- மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி மூன்று கிராம் 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

கர்ப்பப்பை நோய்கள் தீர:-  கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை இரண்டு வேலை 21 நாட்கள் சாப்பிடலாம்

பெரும்பாடு தீர, கர்பப்பை பலப்பட:- வெட்சிபூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க  தீரும் கர்பப்பை பலப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் விரும்பி அணியும் சேலைகள்



இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் விரும்பி அணியும் சேலைகள்

ஆளை அசத்தும் காட்டன் புடவைகளில் எத்தனை வகை ?

காட்டன் புடவைகளுக்கு என்றுமே தனி மவுஸு உண்டு, ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான காட்டன் புடவைகளை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு பெருங்குழப்பமே இருக்கும். ட்ரெடிஷனல் உடையில் மார்டன் லுக் கொடுக்க சில டிப்ஸ்…



பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ப்யூர் காட்டன் : மற்றவரக்ளை விட உங்களை தனித்துவமாய் காட்டிடும். எளிமையான உடையாக இருந்தாலும் டிசைனர் சாரியை விட இந்த ப்யூர் காட்டன் ரிச் லுக் கொடுக்கும். சற்று பருமனாக இருப்பவர்கள் ப்யூர் காட்டன் தவிர்த்திடுங்கள்.



போச்சம்பள்ளி : காட்டன் சேலைகளை இந்த வகை மிகப்பிரபலம் இதில் வரும் சில ஜியோமெட்ரிக் வடிவங்கள் பார்ப்போரை கவர்ந்திடும். காட்டனுடன் சிறிது சில்க் சேர்ந்த துணியென்பதால் விரைப்பாக இல்லாமல் சற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும்.



பூம்காய் சேலை : இந்த வகை சேலை ஒரிசா மாநிலத்தில் மிகப்பிரபலம். சேலை முழுவதும் சின்ன சின்ன மீன்கள் இருப்பது போன்ற டிசைன் இருக்கும். வெற்றியையும், ஆரோக்கியத்தையும் பறை சாற்றும் விதமாக இந்தவவை சேலையை அணிகிறார்கள். இதில் மீனைத் தவிர பூக்கள்,மயில் என பல்வேறு டிசைன்கள் வந்துவிட்டன.எத்தினிக் லுக் வேண்டுமென்றால் இதனை தேர்வு செய்யலாம்.



டண்ட் சேலை : பெங்காலி காட்டன் சேலையான இது க்ரிஸ்ப்பாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பலரது ப்ர்ஸ்ட் சாய்ஸ் இது தான். இதில் பயன்படுத்தியிருக்கும் நூல் மிகவும் மெலிதாக இருப்பதால் ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



சந்தேரி காட்டன் சேலை : முழு ட்ரான்ஸ்பரண்ட்டாக இல்லாமல் பாதியளவு ட்ரான்ஸ்பரண்ட்டாக இருக்கும். எடை குறைவு என்பதால் பலரும் விரும்பி அணிகிறார்கள் மத்திய பிரதேசத்தில் பிரபலமான இந்த வகை சேலைகளில் மயில்,ஜியோமெட்ரிக் டிசைன்,காயின்ஸ் போன்றவை இடம்பெறும். சேலை முழுவதும் டார்க் கலர் ஒன்றும் தங்க நிறத்தில் பார்டரும் இடம் பெறும் திருவிழாக்களுக்கு இதை அணியலாம்.



கோட்டா சேலை : ராஜஸ்தானின் ஸ்பெஷல் இது. பெரும்பாலும் சேலை முழுவதும் சதுரங்கள் நிரம்பிய டிசைன் இருக்கும். இதனை பார்ட்டிகளுக்கு மட்டுமல்ல கேஷூவல் உடையாக கூட அணியலாம். இதிலேயே ப்ளெய்னாகவும் எம்பிராய்டரி, பார்டர் பேட்சஸ் நிரம்பிய சேலைகள் கூட கிடைக்கின்றன.

இளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள்



இளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள் – அவசியம் படியுங்கள்…

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும். சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும்,அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது.

நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா?

இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.

வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களை குறிக்கும். இவர்கள் உடலில் வேகமான வளர்ச்சி 9 1/2 வயதில் தொடங்கி 13 1/2 ஆண்டுகள் வரை தொடர்கிறது.



பொதுவாக ஒரு பெண் சராசரியாக 12 1/2 வயதில் பூப்பெய்துகிறாள். அவளது உடலில் பெரிய அளவிலான வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது.

இவர்களுக்கான சத்தான உணவுப் பரிந்துரைகளின் பட்டியல் 10 முதல் 12 வயது, 13-15 வயது, 16-18 வயது என்ற 3 பிரிவுகளாக உள்ளது. வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தையும், பொதுவான எடையில் 53 சதவீதத்தையும், உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள்.

அந்த வளர் இளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் எடை இரு மடங்காக உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும், கொழுப்பு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிப்பு நேரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. கருமுட்டை உற்பத்தி சுழற்சியையும், கால்சியம் அளவை 300 கிராம் முதல் 750 கிராம் வரையிலும் பராமரிப்பதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.

எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம்.

இன்றைய வளர் இளம் பெண்கள் பல சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது இருக்கிறது. அதாவது,

சாப்பிடுவதற்கு எதைத் தேர்வு செய்வது என்பதில் பெரிய அளவில் கட்டுப்பாடு வைத்துக்கொள்வது.

தங்கள் வயதை ஒத்தவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களால் தீவிரமாக ஈர்க்கப்படுதல்.

மது குடிக்க, புகை பிடிக்க மற்றும் மூளையை பாதிக்கும் வகையில் நரம்பு மண்டலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மருந்துகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகுதல்.

ஸ்லிம் ஆக இருப்பதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தி விடுதல்.

உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருத்தல்.

பெற்றோரின் உணவுப் பழக்கத்தில் இருந்து மாறுபட்ட உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கருதுதல்.

இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன.

சாப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந்த பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன.



அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து. அதற்கு என்ன செய்யலாம்?

அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும்.

பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். அதை வராமலும் தடுக்க வேண்டும்.

உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

சத்து குறைவான உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும், சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனோரீதியாக கண்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.

மேலும், உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும். அதற்காக,

பலவகையான உணவு சாப்பிடுவது.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது.

குறைவான கொழுப்புச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்வு செய்வது.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது.

கணிசமான அளவுக்கு சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

வளர் இளம் பருவ பெண்கள் என்னென்ன சாப்பிடலாம்?

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும்.

டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பச்சை இலை காய்கறிகள்.

2. வேரில் விளைபவை. கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

3. கிழங்குகள் – தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.

4. குரூப் – 1 காய்கறிகள். நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

5. குரூப் – 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குரூப் 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரையும், குரூப் 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரையும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்கறிகளைப் போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஆண்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்திர அவஸ்தை!...



ஆண்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்திர அவஸ்தை!...

♥இது #பெண்கள் பற்றியது, ஆனால் பிரத்தியேகமாக ஆண்களுக்காக. உங்கள் காலில் ஒரு காயம். அதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கிறது. காயத்தில் ஏற்பட்ட வலி வேறு பாடாகப்படுத்துகிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

♥நிச்சயம் உங்களால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. அதற்கான மனநிலையும் இருக்காது. இந்த வலி ஒருபுறம் என்றால், அந்த வேதனைக் காலத்தில் உங்களை எல்லோரும் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்கிறார்கள். வீட்டில் ஓர் ஓரமாக (சில) ஒதுக்கிவைக்கப்படுகிறீர்கள். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நீங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?

♥இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க்கையின் சரிபாதி காலத்துக்கு, அதுவும் மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் நிகழ்ந்தால் வாழ்க்கை நரகம்தானே?! அந்த நரகத்தை மாதா மாதம் தாங்கிக்கொண்டேதான் நம் சகோதரியும், மனைவியும், அம்மாவும், உலகில் உள்ள எல்லாப் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... மாதவிடாய் நாள்கள்’ என்கிற பெயரில்.

♥அந்த வேதனை தரும் நாள்களில், வலியைத் தாங்கிக்கொண்டு, தங்கள் வேலையையும் மற்றவர்கள் வேலையையும் செய்து கொடுப்பது பெண்கள் நிகழ்த்தும் சாதனை. எல்லாப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்வதாலேயே நம் கண்களுக்கு இது, சாதனையாகத் தெரிவதில்லை. சாதாரணமாக தெரிகிறது.

♥நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் அத்தனைப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்கிறார்கள்.
எப்போதும் மாதவிடாய் பற்றிச் சொல்லும்போது `இது பெண்களின் சமாசாரம்’ என்று மட்டும்தானே சொல்வார்கள். அதைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

♥நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இங்கே மாதவிடாய் சுழற்சி பற்றி அறிவியல் சொல்வதைத்தான் பார்க்கப் போகிறோம். இது அறிவியல் பாடத்தில் ஏற்கெனவே படித்தவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடும், ஆனால், ஒவ்வோர் ஆணும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி.


#மாதவிடாய்_சுழற்சி
♥மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.

#கர்ப்பப்பையில்_ஏற்படும்_மாற்றங்கள்...
♥மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.

1>#வளரும்நிலை
இது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.

2>#சுரக்கும்_நிலை
இது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கார்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.

3>#மாதவிடாய்நிலை
கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.
இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.
இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.


♥இந்த நிகழ்வுகள் அனைத்தும் அறிவியலில் படித்ததுதான் என்றாலும், நமக்கு இன்னும் மாதவிடாயைப் பற்றித் தெரியாது. ஏன் தெரியாது என்று கேட்கும் ஆண்களுக்காக இந்தக் கேள்விகள்...

1. சானிட்டரி நாப்கின் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?

2. கடைசியாக எப்போது சானிட்டரி நாப்கின் வாங்க கடைக்குச் சென்றீர்கள்?

3. உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் இன்று எத்தனையாவது நாள்?

4. உங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்கள் யாரிடமாவது, மாதவிடாயைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலான ஆண்களிடம் “இல்லை”, “தெரியாது” என்ற பதில்களே உள்ளன. அப்படியானால், மாதவிடாயைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே?.......

♥ இந்த மாதவிடாய் நாட்களில் மனைவியை புரிந்துகொள்ளுங்கள்.. இந்தநாட்களில் சரி அவளுக்கு சற்று ஓய்வையும் ஆதரவையும் அரவனைப்பையும் கொடுங்கள்... உங்களை மறுதாயாக அவள் உணருவாள்.
நன்றி உலகத்தமிழ் மங்கையர் மலர் .

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..




கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
.