செவ்வாய், 19 ஜூன், 2018

ஆணுறை தெரியும், பெண்ணுறை பற்றி தெரியுமா?

ஆணுறை தெரியும், பெண்ணுறை பற்றி தெரியுமா?


ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் எனும் பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த சமாச்சாரத்தை தான் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இளம்தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதையே விரும்புகிறார்கள். இன்னும் சில வருடம் ஜாலியாக இருந்து விட்டு பிறகு அதை பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.
பிள்ளை பெறுவதை தள்ளிப்போட புதுமண தம்பதியினர் பல கருத்தடை முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒரு வகை கர்ப்ப தடை மாத்திரைகள். சில பெண்கள், மருத்துவரின் அறிவுரையோடு மாத்திரையை விழுங்குகிறார்கள். ஆனால், பிள்ளை பெற்றுக்கொள்ள நினைக்கும்போது, இத்தனை நாட்கள் சாப்பிட்ட மாத்திரைகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடுமோ? அதனால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்குமோ? என்கிற பயம் தொற்றி கொண்டு விடுகிறது. அப்போது மருத்துவர் எவ்வளவு தேற்றினாலும் அத்தம்பதியினர் திருப்தி அடைவதும் இல்லை.
ஆனால் கர்ப்பத்தைத் தள்ளிப்போட ஆண்கள் உடலுறவின்போது, ஆணுறையை அணிந்து கொள்கிறார்கள். இதன் மூலம், முழு அளவு திருப்தி உண்டாவதில்லை என்று பல ஆண்கள் கூறி வந்தாலும், பெண் கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படுகிறது. அதிலும் சில சமயங்களில், கவனக்குறைவால், எதிர்ப்பார்க்கும் பலன் அதாவது கர்ப்பத்தடை சரியாக அமைவதில்லை என்கிற குறைபாடும் உண்டாகிறது. அதனால், ஆண்கள் ஆணுறையை தவிர்க்க நினைக்கிறார்கள்.
ஆண்களின் இந்த பிரச்சனையை போக்க, பெண்ணுறைகள் சந்தைக்கு வந்துவிட்டன. அதாவது, ஆணுக்கு பதில் பெண்ணானவள் தன்னுடைய உறுப்பில் உறையை பயன்படுத்துவதுதான். மருத்துவ கண்ணோட்டத்தில், ஆணுறையை விட பெண்ணுறை கூடுதல் பலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கருத்தடை சாதனம், பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாப்பதுடன், விந்தணுக்கள், கருமுட்டையை அடைந்து கருவுறாமல் காக்கிறது.
பாலியூரத்தீன் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக்கால் பெண்ணுறைகள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கும்போது கூரான பொருட்களை கொண்டு வெளியே எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், பெண்ணுறை சேதம் அடைந்து விடும். பின்பு எதிர்பார்க்கும் பலனை தராது பொறுமையைக் கையாள வேண்டும்.
கடையில் இருந்து வாங்கும்போது, பொருள் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்க வேண்டும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தும்போது, 95% பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்த கருத்தடை சாதனத்தினை மருத்துவரின் ஆலோசனை அல்லது பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தலாம் என்பதுதான் பிளஸ் பாயிண்ட். மேலும் தேவையான சமயத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும். ஆணுறை போல் ஆரம்ப நிலையிலேயிருந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் பக்க விளைவுகள் ஏதும் உண்டாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக