வியாழன், 25 மே, 2017

சர்க்கரை நோயாளிகளே... சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம் வாருங்கள்..!



சர்க்கரை நோயாளிகளே... சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம் வாருங்கள்..!

கிழங்கு வகைகளைச் சாப்பிட சிலருக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. `கிழங்குகளைச் சாப்பிட்டால் எடை கூடும்’ என்கிற பயமும் ஒரு காரணம். ஆனால், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இதில் விதிவிலக்கு. பெயருக்கேற்றாற்போல தித்திக்கும் சுவை, அதோடு இனிப்பான பலன்களையும் கொடுக்கக்கூடியது இந்த அற்புதக் கிழங்கு. இதைத் தண்ணீரில் போட்டு வேகவைத்து, அப்படியே சாப்பிடலாம்.

‘சர்க்கரை’வள்ளிக்கிழங்கு எனப் பெயரிலேயே இனிப்பு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடக்கூடாது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அது தவறு. ‘உண்மையில் இதற்கு மாறான குணங்களைக் கொண்டது. இதற்கு சர்க்கரைநோயை வராமல் தடுக்கும் குணமும் உண்டு’ என்று கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்ற கிழங்குகளைவிட எப்படிச் சிறந்தது என்பதையும் விவரிக்கிறார்.

“வேர்க்கிழங்கு வகையைச் சேர்ந்தது இந்தத் தாவரம். இனிப்புச்சுவை மிகுந்த கிழங்கு என்பதால், ‘சர்க்கரைவள்ளிக்கிழங்கு’ எனப்படுகிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தாவரவியல் பெயர்  'இபோமோயா பட்டடாஸ்'  (Ipomoea batatas). இந்தக் கிழங்குக்குக் சமஸ்கிருதத்தில் 'பிண்டாலு' மற்றும் 'ரத்தாலு' என்று பெயர்.

*சர்க்கரைநோயை எப்படித் தடுக்கும்?*

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன்தான் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும் பணியைச் செய்கிறது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு அல்லது சுரந்த இன்சுலினில் போதிய ஆற்றல் இல்லாதபோது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைநோயை ஏற்படுத்திவிடும். ஆகவே, சர்க்கரைநோய் ஏற்படாமலிருக்க வேண்டுமானால், இன்சுலினின் அளவைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் குறைந்தளவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Lower Glycemic Index)  இருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். அதாவது, இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவும் இந்தக் கிழங்கு. மேலும், ‘இதில் உள்ள நார்ச்சத்து உணவிலுள்ள குளூகோஸை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்’ என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், ஆய்வுக்கூடங்களும்,  நவீன தொழில்நுட்பங்களும் இல்லாத பழைய காலத்திலேயே  `திரவிய ஸமான்யம்’ என்ற பெயரில் ஆயுர்வேதம் இதைப் பற்றி கூறியுள்ளது.

அதன்படி, உடலில் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால், அதன் வடிவத்தைக் கொண்ட உணவுப் பொருள்களைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். அதனால் அந்த உறுப்பின் செயல்படு திறன் அதிகரித்து, அதற்கு ஏற்பட்ட கோளாறுகளைச் சரிசெய்யும் என்பதே இதன் பொருள். சர்க்கரைவள்ளிக்கிழங்கு பார்ப்பதற்கு கணையத்தின் வடிவில் இருப்பதால், இது இரைப்பையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

17 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த நரஹரி பண்டிதர் என்ற ஆயுர்வேத மருத்துவர் 'அபிதான சூடாமணி - ராஜ நிகண்டு' என்ற புத்தகத்தில் இதைப் பதிவுசெய்துள்ளார்.

*கிழங்கு வகைகளில் சிறந்தது!*

மற்றக் கிழங்கு வகைகளைவிட இதில் அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் குறைந்தளவு கொழுப்புச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகளும் உள்ளன.

பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும்  வேர்க்கிழங்கு வகைகள், வாயுத்தொல்லையைத் தரக்கூடியவை. ஆனால், இந்த கிழங்கை உண்பதால் வாயுத்தொல்லை ஏற்படாது. எல்லா வகை கிழங்குகளிலும் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் கொழுப்பு குறைவாகவும். நார்சத்து அதிகமாகவும் உள்ளது. இது, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமையும்.”

*கவனம்:* அஜீரணம், மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருக்கும்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக