திங்கள், 12 டிசம்பர், 2016

சோறு எப்படி சாப்பிட வேண்டும்?

சோறு எப்படி சாப்பிட வேண்டும்?

சோறு எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள நினைத்த போது, பழைய சங்க காலப் பாடல்களில் படித்த சில அழகிய கருத்துக்கள் நினைவில் எழுந்தன.

ஒளவையார் எது கொடியது என்ற தன் வெண்பாவில், எல்லாவற்றையும் விட கொடுமையானது, அன்பில்லா பெண்டிர் கைகளால் பரிமாறப்படும் உணவை உண்பது தான் என்று அழுத்தம் திருத்தமாகக்க் கூறியிருக்கிறார்.

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோஅன்பிலாள் இட்ட அமுது என்றும் கூறியிருக்கிறார்.

இன்னொரு வெண்பா [பாடல் சரியாக நினைவில் இல்லை]
பாலும் தேனும் பாகும் கலந்து அத்தனை சுவையான அடிசிலும் அன்பில்லாத கையால் உண்ணும்போது விஷமாகிறது. அதுவே பழைய சோறும் கூட அன்போடு பரிமாறப்படுகிறபோது, அதுவே அமிர்தமாகிறது என்று அழகாகக்கூறுகிறது !

முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகளின் சிறப்பும் பாடல்களின் அருமையும் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது!

சரி, இப்போது சாதம் எப்படி சாப்பிட வேன்டும் என்ற விஷயத்திற்கு வருகிறேன்.

சோறும் எப்படி சாப்பிட வேண்டும்?

சோற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சோறு  சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயு வை ஏற்படுத்தும். சோற்று உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சோற்றில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது. பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சோறு செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக