திங்கள், 25 நவம்பர், 2019

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26.


சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம்: செழிப்பையும் கொழுப்பையும் தரும் குருபகவான்!

சமீபத்தில் உலகம் முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி உடல் பருமன் தினம் அனுசரித்த நிலையில் இன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமாக உடலில் சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாகக் கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உலகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப்  பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்துபோனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில்  அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.



தற்போது வேகம் நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத  நிலை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தை மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. பிற்கால உடல் நலத்தையும் கல்வியையும் தரமான வாழ்க்கையையும்  பாதிக்கும் இந்நிலையை எதிர்த்து சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத்  தகவல்கள் எச்சரித்து வருகின்றன

ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை  அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.



இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் தோற்றத்தைக் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது அதி முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால், உடல்  பருமன் என்பது ஒரு மருத்துவ நிலை என்பதையும் அது பல்வேறு நோய்களையும் மரணத்தையும் கூட உண்டாக்கும் என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமன்றி தவறான  உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் உண்டாகிறது.

கடந்த சில வருடங்களாக ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன.  இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும்  அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.



உடல் பருமன் உடல் எடையில் இருந்து மாறுபட்டது. உடல் பருமன் என்றால் அதிகக் கொழுப்பு நமது திசுக்களில் இருக்கிறது என்று பொருள். ஒரு மனிதனுக்கு உயரத்துக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டிய ஆரோக்கியமான எடையை விட அதிகமாக இருப்பதே இவ்விரண்டின் அர்த்தமாகும். உங்களுக்குத் தேவையான எரிசக்தியை விட அதிக அளவில் உட்கொள்ளுவதாலேயே உடல் பருமன்  ஏற்படுகிறது. உள்ளெடுக்கும் மற்றும் வெளியேற்றும் எரிசக்திக்கு இடையில் இருக்கும் சமநிலை நபருக்குநபர் வேறுபடும். உங்கள் மரபான உடலமைப்பு, மிகை ஊட்டம், அதிக கொழுப்புள்ள பொருட்களை உன்னுதல், உடற்பயிற்சியின்மை ஆகிய காரணிகளால் உங்கள் எடை அளவு பாதிக்கப்படும். உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய்  வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

உடல் பருமனுக்கான ஜோதிட காரணங்கள்

உடல் பருமனுக்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா எனப் பார்த்தபோது, ஆச்சரியமூட்டும் வகையில் நிறையவே தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது. உடல் பருமனுக்கு காரகர் குரு  என்றும் ஊளைச் சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோணம், கேந்திர திரிகோணங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்,  சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது  உடல் பருமனும் ஊளைச் சதையும் ஏற்படுகின்றது. முக்கியமாகக் கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை  “பணத்தொப்பை” எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தனகாரக குரு கொழுப்பு சத்திற்கும் காரகர் என்பது பொருத்தமன்றோ?



ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம்பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்புகொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என  மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

மேலும் ஜெனன ஜாதகத்தில்  குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, போஜன ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது போஜன ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது  ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும். பானை வயிறு படைத்தவர் என்று போற்றப்படும் விநாயக பெருமானின் ஜாதகத்தில் நீர் ராசியான விருச்சிக  லக்னமாகி லக்னத்தில் கேதுவும் கால புருஷ இரண்டாமிடமான ரிஷபத்தில் ராகுவும் நின்று ஐந்தாமதிபதியாகிய குரு நீர் ராசியில் உச்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ சேர்க்கைகள்

1. லக்னம் நீர் ராசியான கடகம் அல்லது மீனமாகி அதில் குரு பகவான் ஆட்சி உச்சம் ஆகி நிற்பது அல்லது நீர் ராசியாகிய விருச்சிகமாகி அதை நீர் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்ப்பது.   இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் ஒருமுறை குண்டாகிவிட்டால் பின் மீண்டும் உடல் பருமனில் இருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.



2. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகி அதில் குரு நின்று காற்று ராசி அதிபதிகளோடு தொடர்பு கொள்வது.

3. பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும்   ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும்.

அ. குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில்  நிற்பது குறைந்த அளவிலாவது தொப்பை இருக்கும்.



ஆ. கன்னி மற்றும் ஜெனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனைச்சரனும் சேர்ந்துகொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.

4. கால புருஷ இரண்டாமதிபதியான சுக்கிரனும், கால புருஷ ஒன்பதாமதிபதியான குருவும் எந்த விதத்திலும் சேர்க்கை பெற்று நிற்பது.

5. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் நின்று தனுர் ராசியைப் பார்ப்பது மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் குரு நின்று ரிஷப ராசியைப் பார்ப்பது.

6. ராகுவும் கேதுவும் லக்னத்தில் குரு/சுக்கிரனின் சாரம்பெற்றும் நிற்பது மற்றும் தனது திரிகோண பார்வையாலும் 3-7-11 பார்வையாலும் குருவையோ சுக்கிரனையோ பார்ப்பது. ராகுவும் கேதுவும்  லக்னத்தில் நிற்கப்பெற்றவர்கள் சமூக பழக்கங்களுக்கு கட்டுப்படாதவர்களாக இருப்பதோடு அந்நிய உணவு வகைகள் மற்றுக் துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் பருமன் ஏற்படும்.

7. குரு மற்றும் சுக்கிரனின் மேற்கண்ட தொடர்புகளை கொண்டு செவ்வாய் நீசமடைந்து நிற்பது, கடகம் மற்றும் மீனத்தில் நீர் ராசிகளில் நிற்பது, தனது வீட்டிற்கு பன்னிரண்டில் நிற்பது, 6-8-12 தொடர்புகள் பெறுவது போன்றவை ஜாதகரை உடற்பயிற்சியற்ற நிலைக்கு உட்படுத்தி அதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் உடல் கட்டழகு, உடல் பயிற்சியின் காரகர் செவ்வாய் என்பது  குறிப்பிடத்தக்கது.

8. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் லக்னமாகி, அங்கு குரு சாரத்தில் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) ராகு நின்று, சுக்கிரனின் சாரத்தில் (பரணி, பூரம், பூராடம்) கேது நின்று குருவுக்கும் சுக்கிரனுக்கும் பலமான தொடர்பு ஏற்படுத்துவது. முக்கியமாகக் கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை  போன்ற வயிறு ஏற்படுகிறது.



9. குருவோடு சனி, யுரேனஸ், நெப்ட்யூன், புளுட்டோ போன்ற கிரஹங்கள் லக்னத்திலோ, குருவின் வீடுகளிலோ, சுக்கிரன் வீடுகளிலோ, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளிலோ தொடர்பு கொள்ளும்போது  திடீரென உடல் பருமன் ஏற்படுகிறது என மேற்கத்திய ஜோதிடம் கூறுகிறது.

10. ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் இருக்கும் கிரஹங்களை பொருத்து ஒருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை அமைந்துவிடுகிறது. பத்திலே ஒரு  பாவி இருக்க வேண்டும் அல்லது ஒரு பாம்பாவது (ராகு/கேது) இருக்க வேண்டும் என்பது ஜோதிட சொலவடை. பத்திலே அசுப கிரஹங்கள் இருந்தால் அவர்கள் வேலை கடுமையான உடல் உழைப்புடன் அமையும். மாறாக குருவோ சுக்கிரனோ அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வேலை வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசு வேலையிலேயே நாட்டம் இருக்கும். இவர்களையே உடற்பருமன் அதிகம்  தாக்குவதை காணலாம்.

உடல் பருமன் ஏற்படும் காலம்

மேற்கண்ட கிரஹ நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது, 6/8/12 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டு குரு தசை புத்தி ஏற்படுபோது உடல் பருமன் நோயாக அவஸ்தையைத் தருகிறது.

பெண்களுக்குப் புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் "குச்சி குச்சி ராக்கம்மாவாக" இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல்  பருமனடைவதை பார்க்க முடிகிறது.

உடல் பருமனை குறைக்கும் மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்

1. உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள் ஜாதகத்தில் கொண்டவர்கள் குருவின் காரகம் நிறைந்த இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக நெய் சேர்த்த உணவுகளை மற்றவர்களுக்கு  அளிக்கவேண்டுமே தவிர அவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் குருவின் அம்சம் நிறைந்தவர்களை இனிப்பு சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

2. செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும். அழகன் எனப்படும் முருகப்பெருமானைத் திருச்செந்தூர் ஸ்தலத்தில் வணங்குவது.



3. கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும் மற்றும் கேதுவின் அதிதேவதையான விநாயக பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு  வணங்குவது.

4. அநேகமான உடல் பருமனுக்கு குருவின் காரக விட்டமினான கொலின் குறைபாடு கல்லீரல் (லிவர்) பாதிப்பை ஏற்படுத்தி வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர செய்து உடல் பருமன் நோயிற்குக் காரணமாகிறது. எனவே, தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் கோலின் விட்டமினை எடுத்துகொள்ளும்போது உடல் பருமன் நாளடைவில் குறைகிறது.

5. ஆயுர்வேத மருந்துகளில் நவக குக்குலு, யோகராஜ குக்குலு, கோஷிராதி குக்குலு போன்ற குக்குலு மருந்துகளைத் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது. முக்கியமாக வாரனாதி  கஷாயம் அல்லது கொடாம்புளி சூப் போன்றவற்றுடன் எடுத்துக்கொள்வது விரைவில் பலனளிப்பதை காணமுடிகிறது.

6. வாயு பொருட்கள், கிழங்குகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்த்து தன்வந்திரி வடி, பாஸ்கர  லவனம், அஷ்ட சூரணம் போன்ற மருந்துகளை உட்கொள்வதால் வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை  குறைக்கும்.



7. செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளைப் பூண்டினை அதிக அளவு சேர்க்கும்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. இது அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்கப்பட்ட ஒரு எளிய வழியாகும். மேலும் செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.

8. வயிறு சமந்த பிரச்னைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெய்யுடன்  தேன் சேர்த்து சாப்பிடுவது, கருஞ்சீரக கஷாயம் போன்றவை உடல் பருமனை குறைக்க உலகளவில் புகழ் பெற்ற மருத்துவ முறையாகும் என்றாலும் மாதவிடாயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட  கருஞ்சீரகத்தை கருவுற்றிருப்பவர்கள் உட்கொள்ளக்கூடாது.

10. ராஜ கனி எனப்படும் குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சை உடல் பருமனை குறைக்கும் அற்புத மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் எலுமிச்சை சாரு மற்றும் தேன்  கலந்து பருகுவது மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.

11. இவற்றிகெல்லாம் முத்தாய்ப்பாக உடல் பருமன் கொண்டவர்கள் அடிக்கடி ஏதாவது உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி கொறிப்பதை நிறுத்தவேண்டும். முக்கியமாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, படித்துக்கொண்டே சாப்பிடுவது போன்றவை தவறான உணவு பழக்கங்களாகும். முக்கியமாக குருவின் காரகம் நிறைந்த கடலையை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், நெய் நிறைந்த இனிப்பு வகைகள் ஆகியவற்றை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த டிவி, மொபைல் போன் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் நமது உடலை ஒரு கை  பார்த்துவிடுவார்கள்.

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவார். கண்டதைத் தின்றால் குண்டராவார்” என்பது குருவின் சிறப்பை விளக்கும் சொல் வழக்காகும். எனவே குரு பகவானை வணங்கி உடல் ஆரோக்கியத்துடன்  வாழ்வோமாக!
நன்றி தினமணி.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக