வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பேதி மருத்துவம்



பேதி மருத்துவம்

“ அடர் நான்கு மதிக் கொருகால் நுகர்வோம் “ என சித்தர் பாடல் ( பதார்த்த குண சிந்தாமணி ) கூறுகின்றது.

உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும்.

எப்படி மேற்கொள்ள வேண்டும் ?

பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும். மாலை வரை அசதி இருக்கும். எனவே முழுமையான ஓய்வு கிடைக்கும் நாளில்தான் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்தினம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். (எண்ணெய்க் குளியல் பகுதியை பார்க்கவும் ), எண்ணெய் குளித்த அன்று முழுவதும் எளிதில் செரிமானமாகும் உணவுகளாகிய கஞ்சி, குழைவாக வடித்த சோறு, மிளகு இரசம், இட்லி, இடியாப்பம், பழச்சாறு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்குள் உறங்கிவிட வேண்டும்.

பேதி மருத்துவம் மேற்கொள்ளும் நாளன்று காலை 4.30 க்கு துயில் எழுந்து 5.00  மணிக்குள்ளாக பேதி மருந்துகளை எடுக்க வேண்டும் (எது பேதி மருந்து என்று பின்பு விளக்கப்படுகின்றது )

இரவு கண்விழித்த பின்போ, தொலைதூரப் பயணம் மேற்கொண்ட பின்போ, அதிக வேலைகள் செய்த மறு நாளோ பேதி மருத்துவம் எடுக்கக் கூடாது. என்றாலும் ஏதேனும் நோய் நிலையில் அல்லது அவசரகாலம் என்றால் சித்த மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

என்ன நிகழும் ?

பேதி மருந்து உட்கொண்ட 30  நிமிடத்தில் இருந்து 1 மணி நேரத்திற்குள்ளாக வயிறு கழியத் தொடங்கும். நாம் எடுத்துக் கொள்ளும் மருந்தின் தன்மையைப் பொருத்தும் மருத்துவம் மேற்கொள்ளும் உடல்நிலையைப் பொருத்தும் பேதியாகும் அளவு வேறுபடும். குறைந்தது 4 முறையிலிருந்து 20 முறை வரை பேதியாகும். சில வேளை படபடப்பு, வயிற்றில் இலேசான வலி, குமட்டல், வியர்வை, சோர்வு ஏற்படலாம். அச்சப்படத் தேவையில்லை. மதியம் வரை பேதியாகும். மற்ற சிறு பிரச்சனைகள் 2 மணி நேரத்தில் சரியாகி விடும்.

என்ன சாப்பிட வேண்டும் ?

பேதி மருந்து எடுத்துக் கொண்டவுடன் சில வேலை வயிறு கழியாமல் வயிற்றுள் காற்று சேர்ந்திருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டால் வெந்நீர் குடிக்க வேண்டும். ஓரிரு முறை வயிறு கழிந்த பின்பு அரிசி கஞ்சி உப்புப் போடாமல் குடிக்கலாம். மோருடன் நீர் அதிகம் கலந்து குடிக்கலாம். தேன் கலந்த நீரினை சிறிது நேரம் வாயில் வைத்திருந்து உமிழ்நீருடன் கலந்து விழுங்க வேண்டும். மதியம் வரை அரிசிக் கஞ்சி, மோர், தேன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மதியம் வரை உப்பு, காரம் சேர்க்கக் கூடாது. குடல் முழுவதும் சுத்தமான பின்பு தாமாகவே பேதியாவது நின்று விடும்.

மதியத்திற்குப் பின்பாகவும் வயிறு கழிவது தொடர்ந்தால் மோருடன் கல் உப்பு கலந்து அருந்த வேண்டும். வசம்பு என்ற பொருள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை எரித்து கரியாக மாற்றி அந்தச் சாம்பல் ஒரு சிட்டிகை அளவுடன் தேன் கலந்து சுவைத்து சாப்பிட்டால் உடனடியாக வயிறு கழிவது நின்று விடும்.

குடல் சுத்தமான பின்புதான் குளிக்க வேண்டும். குளித்த பின்பு நன்றாகக் குழைவாக சமைத்த சோறு சாப்பிட வேண்டும். அதில் கலந்து சாப்பிட தனியாக இரசம் செய்ய வேண்டும். வழக்கமான இரசம் போலவே செய்யலாம். புளி சேர்க்கக் கூடாது. நாட்டுத் தக்காளி, பெரிய நெல்லி, எலுமிச்சை போன்ற ஏதேனும் ஒன்றை புளிப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

காரத்திற்கு மிளகாய் போடக்கூடாது. மிளகு மட்டும் சேர்க்க வேண்டும். கல் உப்பு பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தாளிதம் கூடாது. இந்த இரசமும், மோரும் சேர்த்து சோறு சாப்பிடலாம். பிஞ்சுக் காய்களை வேக விட்டு மிளகு, உப்பு போட்டு சாப்பிடலாம்.

மாலையில் கஞ்சி குடிக்கலாம். இடையிடையே சோர்வு ஏற்பட்டால் பழச்சாறு அருந்தலாம். காலையில் சரியாக வயிறு கழியாமல் வயிறு உப்புசம் இருந்தால் மேலே கூறிய இரசத்தை வடிகட்டி 200 மி. லி. வரை குடிக்க வேண்டும். அது குடல் முழுமையாக சுத்தமாவதற்கு உதவும்.

இரவு பசி ஏற்பட்டால் இட்லியுடன் மோர் அல்லது அரிசிக் கஞ்சியுடன் இரசம், மோர் கலந்து பசியாற்றிக் கொள்ளலாம். அன்று இரவு 9 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். மறுநாள் வழக்கமான உணவு உட்கொள்ளலாம். வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.

பிற அறிவுரைகள்

ஏதேனும் மருந்துகள் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று மேற்கொள்ள வேண்டும்.

3 வயதிற்கு மேல் எல்லா வயதினரும் 4 மாதத்திற்கு ஒரு முறை இம்மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வாதம், வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள், மூளை தொடர்பான நோய்கள், நுரையீரல் நோய்கள் போன்ற பல விதமான நோய் உள்ளவர்களுக்கும் சிறப்பான பேதி மருந்துகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்வதால் நோயின் தாக்கம் குறையும். முறையான மருத்துவ அறிவுரை தேவை. நோயர்களும் அச்சப்படாமல் இம்மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

இம்முறையால் எவ்வளவு அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும் உடலில் நீர்ப்பற்றாக்குறை (Dehydration) உருவாகாது. அதிக தாகம் ஏற்பட்டால் மட்டும் நீர், மோர், தேன் கலந்த நீர், அரிசி கஞ்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பருகலாம்.

காலையில் பேதி மருந்து சாப்பிட்ட பின்பு குளிக்க கூடாது. மதியத்திற்கு பின்பு குளிக்கலாம்.

பேதி மருந்துகள்

1. விளக் கெண்ணை

ஆமணக் கெண்ணெய், முத்தண்ணெய் என்ற பெயர்களால் அழைக்கப்படும் எண்ணெய் பேதி மருத்துவத்திற்கு மிகச் சிறந்த பொருளாகும்.

தனியாக விளக் கெண்ணெய் 2 முதல் 8 தேயிலைக் கரண்டி அளவு ( 10 மி. லி முதல் 40 மி. லி வரை ) வயதிற்க்கேற்றவாறு அருந்தலாம். 3 வயதுக் குழந்தை எனில் 10 மி. லி. அளவு அருந்தலாம். நல்ல திடமான நடுத்தர வயதுடையோர் 40 மி. லி. வரை அருந்தலாம்.  விளக்கெண்ணை அருந்திய 15  நிமிடங்களுக்குள் பெதியாகத் தொடங்கம். நன்றாக வயிறு கழியும் வரை வெந்நீர் அருந்திக் கொண்டிருக்கலாம்.

மார்புச்சளி, தோல் அரிப்பு நீங்க 30 மி. லி. விளக் கெண்ணையுடன், இஞ்சிச் சாறு 10 மி. லி. தேன் 10 மி. லி. வெந்நீர் கலந்து பயன்படுத்தலாம்.

வயிற்று மந்தம் நீங்க 100 மி. லி. விளக்கெண்ணெயுடன் 10 பல் பூண்டு போட்டுக் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய் 15 மி. லி. முதல் 40 மி. லி. வரை பயன்படுத்தலாம். இதனைக் குழந்தைகளுக்கு 5  சொட்டு தினமும் கொடுத்து வந்தால் வயிற்று மந்தம் நீங்கும்.

கல்லீரல் பிரச்சனைகள் தீர 30 மி. லி. விளக் கெண்ணையுடன் 15 மி. லி எலுமிச்சைச் சாறு 50 மி. லி. வெந்நீர் கலந்து பயன்படுத்தாலம்.

2. கடுக்காய்

கடுக்காயின் விதை நீக்கி அதனை சிதைத்து கடுக்காயின் விதை நீக்கி அதனை சிதைத்து 3 தேயிலைக் கரண்டியளவு எடுத்து 300 மி. லி. நீர்விட்டு 100 மி. லி.  ஆகும் வரை வற்றக் காய்ச்சி காலையில் அருந்தலாம்.

3. நிலவாகை இலை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் )

நிலவாகை இலை 30 கிராம் ( காய்ந்தது என்றால் 20 கிராம் போதும் ) கொத்தமல்லி விதை ( தனியா ) 20 கிராம் இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து 400 மி. லி. நீர் விட்டு 100 மி. லி. ஆக வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி காலையில் அருந்தலாம்.

4. ஆமணக்கு வேர்

பொடி செய்து 2 கிராம் – 5 கிராம் அளவிற்கு நீருடன் கலந்து காலையில் அருந்தலாம்.

5. பேதி மருத்துவத்திற்கான சித்த மருந்துகள்

    அகத்தியர் குழம்பு, சித்தாதி எண்ணெய், வெள்ளை எண்ணெய், கழற்சி எண்ணெய், மலை வேம்பாதித் தைலம், மெருகன் கிழங்கு தைலம், மேக நாதத் தைலம் போன்ற மருந்துகள் மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கின்றன. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இவை எல்லாமே பொதுவாக பேதி உண்டாக்கவும் சில குறிப்பிட்ட நோய் நிலைகளில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

பயன்கள்

1. உடம்பினைத் தூய்மைப் படுத்துதல் என்று பொதுவாகக் கூறினாலும் உடலில் பல நுட்பமான மாற்றங்களை இந்த பேதி மருத்துவ முறை ஏற்படுத்துகின்றது.

முக்கியமாக உயிர் வளியேற்றத்தை ( Oxidative damage ) பேதி மருத்துவம் தடுக்கின்றது அல்லது தாமதப் படுத்துகின்றது. உயிர் வளியேற்றம் என்பது உடலுக்குத் தீனக்கு விளைவிக்கும் முற்றுப் பெறாத அயனிகளை ( Free Radicals ) உருவாக்கும் வேதி வினையாகும். இயல்பான உடல் இயங்கியலின் போது இந்த முற்றப் பெறாத அயனிகள் உருவாவதும் அவை ஊட்ட உணவுகளால் வெளியேற்றப் படுவதும் ( Free radicals scavenging agents ) நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில நோய் நிலைகளும் நமது தவறான உணவுகளும் தவறான செயல்களும் இந்த முற்றப் பெறாத வேதி வினைப் பொருட்களை வெளியேற்றுவதை தாமதப் படுத்துகின்றன. இதனால் இவை உடலில் நிரந்தரமாகத் தங்கி உயிரனுக்களைச் சேதப் படுத்துகின்றன. இதன் தொடர் வினையால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை மூட்டு வாதம், பக்கவாதம், மாரடைப்பு, நரம்புச் சிதைவு நோய், அல்சைமர் நோய் ( Alzheimer’s disease ), நடுக்கு வாதம் ( Parkinson’s disease ), புற்று நோய்கள் போன்றவை ஆகும்.

இவை வராமல் தடுக்க சித்தர்களால் உருவாக்கப்பட்ட நோய் அணுகா விதி முறைகளில் முக்கியமானது பேதி மருத்துவ முறை. பேதி மருத்துவம் வயோதிகத்தையும் சில சவாலான நோய்களையும் உண்டாக்கும் வேதி வினைகளைத் தடுக்கின்றது. இளமையை மீட்டு கொடுக்கும் ஆற்றல் சில பேதி மருந்துகளுக்கு உண்டு.

2. இக்கால அறிவியலுக்கு சவாலாக உள்ள பல நோய்களைத் தீர்க்கும் பல சித்தர் பேதி மருந்துகள் உள்ளன. உதாரணமாக இரண்டு நிலைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

அதிகமாக மது அருந்தி ஈரல் பாதிக்கப்பட்டு வீங்கிய நிலையில் ( Hepatomegaly ) அகத்தியர் குழம்பு என்ற மருந்தினை எலுமிச்சைச் சாறுடன் கொடுத்தால் பேதியாகும். மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுத்து அந்த ஈரல் பாதிப்பினை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இயலும்.

அதே போன்று பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் கட்டிகள், மாதவிடைக் கோளாறுகள், மகப்பேறு இல்லாத நிலைகளுக்கு சித்தாதி எண்ணெய், மலை வேம்பாதித் தைலம் போன்ற உயர்ந்த மருந்துகளால் பேதி மருத்துவம் புரிந்து இயல்புநிலைக்குக் கொண்டு வர இயலும். மகப்பேறு உண்டாகும்.

இது போலவே ஏராளமான பேதி மருந்துகள் மூலம் உடலினை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் பல நோய்கள் நீங்குகின்றன. “நோய் நாடி நோய் முதல் நாடி.......” என்ற வள்ளுவர் வாக்குப்படி இந்த பேதி மருத்துவம் நோயின் முதலை நாடி (நோய்க்கான காரணத்தைத் தேடி) அதனை நீக்கும் ஆற்றல் பெற்றது.

உடம்பினைக் கட்டுக்கோப்பாக நோய்வராமல் இளமையோடு பாதுகாக்க எண்ணுபவர்கள் தமிழர்கள், காலங்காலமாக பயன்படுத்திய பேதி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக