வெள்ளி, 15 டிசம்பர், 2017

மார்கழி ...

மார்கழி ...

*மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல்.* ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.

மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

*அதிகாலை அற்புதம்*

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

*சரணாகதியே வழி*

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

*மதிப்புக்குரிய மார்கழி*

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்...

*மாதங்கள் எல்லாவற்றிலும் மார்கழி மாதம் சிறந்தது என்று இந்து மதம் கூறுகின்றது.* மார்கழியை ஜோதிட சாஸ்திரம் தனூர் மாதம் என்கிறது. மார்க்கசிரம் என்பது மிருகசீரிடம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். சந்திரன் மிருகசீரிட நட்சத்திரத்தில், கலைகள் பதினாறும் பூர்த்தியாகி பவுர்ணமி ஆனதால் மார்கழி எனவும், சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் தனுர் மாதம் எனவும் கூறப்படுகிறது.

மார்கழி மாத நாட்கள் முழுவதும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சகல சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.

மக்கள் யாவரும் அதிகாலையில் துயில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மார்கழியை நோன்பு மாதம் என்று கூறுவதே சாலப் பொருந்தும்.

நோன்புக்கு புலனடக்கம் இன்றியமையாதது. நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகின்றோம்.

தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதம் மார்கழி என்று கூறப்படுகிறது.

*மகிமைமிகு மார்கழி!*

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தின் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்' என்கிறோம். ஆகையால் இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வாழ, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கை.

அறிவியலின்படி, மார்கழி மாதத்தில் தான் ஒúஸôன் படலம் பூமிக்கு அருகாமையில் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ளது. ஒஸோனை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நல்லதென்ற காரணத்தாலேயே பெண்களை காலையில் கோலம் போடவும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் எனலாம்.

மார்கழியின் பெருமையை ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார். மார்கழி முழுதும் அதிகாலை நீராடி இறைவன் நாமாவை ஒரு முறை ஜபித்தாலே கோடிமுறை ஜபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபடலாம். இத்தகு பெருமை பெற்ற மார்கழியில் இறைவனை நாராயணரை வணங்கி அவர் அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக