புதன், 14 ஆகஸ்ட், 2019

நமது தேசியக்கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.


இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளை நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது.

சுதந்திர தின விழா: செய்யக்கூடாதவை

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் தேசியக் கொடியை செங்கோட்டையில் பிரதமரும், அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்களும் ஏற்றுகிறார்கள்.அதேபோல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்னபிற அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொடியேற்றத்துக்கு மறுநாள் வரும்செய்தித்தாள்களில் கொடியை ஏற்றியதில் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்த செய்திகள் இடம் பெறாமல் இருந்ததே இல்லை.

முதலில் நமது தேசியக்கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

நமது தேசியக்கொடி காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணங்களைக் கொண்டது. மூவர்ணக்கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24ஆரங்களை கொண்ட சக்கரம் உண்டு. ஏற்றியபிறகு, காவி நிறம் மேலாகவும், பச்சை நிறம் கீழாகவும் இருக்க வேண்டும். தலைகீழாகக் கொடியை ஏற்றுவது அவமரியாதைக்குரிய செயலாகும்.

காங்கிரஸ் கட்சியின் கொடியும், தேசியக் கொடியின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒத்து இருப்பதால், கொடியை மாற்றி ஏற்றும் சம்பவங்களும் எப்போதாவது, எங்காவது நிகழ்கின்றன.எனவே தேசியக் கொடிதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு ஏற்ற வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோள்

பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை இந்த வருடம் ஏற்படுத்தியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதில், காகிதத்தாள்களைப் போல பிளாஸ்டிக் பேப்பர்கள் உடனடியாக மட்கும் பொருள் இல்லை என்பதால், தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. தேசியக்கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2ன் படி, தேசியக்கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்கள் மேற்கொண்டால் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது என்று தெரிவித்துள்ளது.

விதிகள்

இந்திய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. ஆனால்,தேசியக்கொடி ஏற்றப்படும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? இதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டும்.தேசியக்கொடிக்கென சில விதிகளை அரசு சட்டமாக்கி உள்ளது.

நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாட்டுக்கும் தேசியக் கொடிகளுக்கு என்று சில மரியாதைகள் உண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்த 72 ஆண்டுகளில் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.தற்போது பொதுமக்கள் வீடு, அலுவலகம் மற்றும் கார் போன்ற இடங்களில் தேசியக்கொடியை வைக்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், இன்னும் பெரும்பாலான மக்களுக்குதேசியக்கொடி விதிகள் தெரியாது.

சுதந்திர தின விழாவிற்கு முன்னதாக, இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் படங்களை தேசியக்கொடியுடன் சமூக ஊடகங்களில் போடுகிறார்கள். இப்படி சமூக ஊடகங்களில்போடுவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

1.2002ஆம் ஆண்டு "இந்திய தேசியக் கொடி சட்டம்" கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக் கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள உரிமை உண்டு.

2.தேசிய கொடியை சூரிய உதயத்திற்கு பின்புதான் ஏற்ற வேண்டும். அதேபோல, சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பு அதாவது மாலை 6மணிக்குள் இறக்க வேண்டும்.

3. 2005இல் இச்சட்டம் திருத்தப்பட்டு இந்திய தேசியக்கொடி இடுப்பிற்குக் கீழ் அணியக்கூடாது போன்ற சில விதிகள் எழுதப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதில் கொடியைகால்சட்டையாக அணிவதற்குத் தடை விதித்துள்ளது.

4.தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாளுதல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால்ஆளப்படுகிறது.

5.எக்காள ஒலியுடன் கொடியை ஏற்றும் போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்தஅல்லது கசங்கிய கொடியைப் பறக்க விடக்கூடாது.

6. சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்குத் தேசியக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது. கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால் நிலையாகப் பொருத்தப்பட்டகம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.

7. தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, வலப்பக்கமாக ஏந்திச் செல்லவேண்டும். மேலும் நிறைய மற்ற கொடிகள் இருந்தால், அனைத்துக் கொடிக்கும் முன்பு நமதுதேசியக் கொடி இருக்கவேண்டும்.

8. இந்திய நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது தேசியக்கொடி காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணங்களைக் கொண்டது.மூவர்ணக்கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி ஆவார்.

9.தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், பசுமையையும் , செம்மையையும் குறிக்குமாறும் பொருள்படும்.

தேசியக்கொடியை ஏற்றுவதற்குமுன் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டீர்கள் தானே.. எல்லோருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக