செவ்வாய், 28 மார்ச், 2017

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்



உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்


இன்றைக்கு கணினி முதல் பல்வேறு பணிகள் வரை உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் அதிகம். சூழ்நிலை காரணமாக நாம் இப்படி வேலை பார்க்கிறோம் என்றாலும், இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

உடலுக்கு தசை இயக்கம் நடக்கிற மாதிரி உழைப்பை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் சரியான வாழ்க்கை முறை, அப்போதுதான் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் தொடர்ச்சியாக 3 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால் நிமிடத்துக்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். அதோடு ரத்தக் குழாயும் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் நாளடைவில் டைப் 2 சர்க்கரை நோய் போன்ற தொந்தரவுகள் வரலாம்.

தொடர்ச்சியாய் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்ட கொழுப்பு எரியாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உட்கார்ந்து வேலை செய்வது வருடக் கணக்கில் தொடர்ந்தால், எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும்.

உடலில் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்குச் செல்லாது. இதன் காரணமாக செல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதன் விளைவாக இளமையிலேயே முதிய தோற்றம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். சீரான ஹார்மோன் சுரப்பும் தடைப்படும்.

10 முதல் 20 வருடங்கள் தொடர்ச்சியாக அமர்ந்தே பணிபுரிவதால் இதய நோய்கள், பக்கவாதம் உள்பட பல உபாதைகள் உண்டாகலாம்.

எல்லாவற்றையும் விட கசப்பான உண்மை, நமது ஆயுட் காலம் குறையலாம்.

தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் 64 சதவீதம் இதய நோய்கள் உண்டாகின்றன. புராஸ்டேட் மற்றும் மார்பகப் புற்றுநோய், 30 சதவீதம் அளவுக்கு ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமக்கு அமையும் பணி, உட்கார்ந்து செய்யக்கூடியது என்றால், அதைத் தவிர்ப்பது கடினம்தான். அதை ஈடுகட்டும் வகையில் பிற உடற்பயிற்சிகள், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை மற்ற நேரங்களில் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக