ஞாயிறு, 4 மார்ச், 2018

அனைவரும் கடைபிடிக்க வேண்டியஆரோக்கியமான 100 பழக்க வழக்கங்கள்!


அனைவரும் கடைபிடிக்க வேண்டியஆரோக்கியமான 100 பழக்க வழக்கங்கள்!

நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ… அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ… அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ… அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.

ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் எனப் பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பழக்கங்கள் என்னென்ன… வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன… நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.

தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெளியில் செல்லும்போது ஷூ, ஸ்லிப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால்தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவதுதான் நாகரிகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை இன்றி வைத்துக்கொண்டிருக்கிறோம். சிலர், `வீட்டில் குழந்தைகள் அதிகமாக டி.வி பார்க்கின்றனர்’ எனப் புகார் சொல்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன… கவனம் இல்லாமல், விழிப்புஉணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன…

நகங்களைக் கடிப்பது

1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.

2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.

3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)

கால் மேல் கால் போட்டு அமர்வது

4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சில ஆய்வுகள் ‘இதயம் தொடர்பான பிரச்னைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்’ என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்னை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கலாம்.
நெட்டி முறிப்பது

6.டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிக்கும்போது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்துவரும்போது, மூட்டுப் பிரச்னைகள்கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

7. இரவில், விளக்குகளை அணைத்துவிட்டு செல்போன் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களைப் பாதிக்கலாம். மேலும், இது தூக்கத்தையும் கெடுக்கும்.

தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில்தான். சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல்போகலாம். இந்த ஹார்மோன் சுரப்புப் பிரச்னை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.

8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃபுல் வாலட்

10. ஆண்களுக்கு, பர்ஸை எப்போதும் பின்பக்கம் வைக்கும் பழக்கம் இருக்கும். பெரும்பாலானோர், பர்ஸை ஏதோ பேப்பர் மூட்டைபோல வைத்திருப்பர். அதில் பணத்தைவிட கார்டுகளும் பில்களுமே அதிகமாக இருக்கும். தடிமனான பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி, மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமரும்போது, உடலின் அமைப்பு (பாஸ்ச்சர்) பாதிக்கப்படும். அதாவது, ஒரு பக்கம் மட்டும் சில செ.மீ உயர்த்தப்பட்டிருக்கும். இப்படிக் கோணலாக அமர்வதால், முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்படும். கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் செய்தால், உங்கள் முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்படும்.

11. அமரும்போது, பின்புற பாக்கெட்டில் இருக்கும் சீப்பு, வாலட், கார்டு போன்றவற்றை டேபிள் மேல் வைத்துவிட்டு அமரலாம்.
ஸ்கின்னி ஜீன்ஸ்

12. பருவகாலத்துக்கு ஏற்ற உணவும் உடையும்தான் உடலுக்கு நல்லது. தமிழ்நாடு வெப்ப மண்டல பூமி. இங்கு, குளிர்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே. அப்போது தடிமனான ஆடைகளை அணியலாம். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. ஸ்கின்னி ஜீன்ஸ், பார்க்க அழகாக இருக்கும்; சிலருக்குக் கச்சிதமான தோற்றத்தைத் தரும். ஆனால், நீண்ட நேரம் இதை அணிந்துகொண்டிருப்பதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படும்.

13. உடலின் வியர்வையை உறிஞ்சும் தன்மைகொண்ட பருத்தி ஆடைகளை அணிவதுதான் சரி. உடலின் வியர்வையை அப்படியே தேக்கிவைத்து, காற்றுப் போகாமல் தடுக்கும் ஆடைகள் உடலின் கிருமிகளை அதிகமாக உருவாக்கும். அரிப்பு, சொறி போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம்.

அதிகப்படியான உடல்சூடு ஏற்பட்டு, சின்னச்சின்ன கட்டிகளும் உருவாகும். தொடைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எரிச்சல், வியர்வை, துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்ற அசெளகர்ய உணர்வுகளும் ஏற்படும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை உண்டாகும்.

14. அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள பகுதிகளுக்கு, காற்றோட்டமான உடையை அணிவதே சிறந்தது. அதுவும், பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளே சிறந்தவை.
கிரிப்பர் இல்லாத செருப்புகள்

15. தற்போது, கலர் கலராக பலவித செருப்புகள் குறைந்தவிலைக்குக் கிடைக்கின்றன. அவற்றில், சிலவகை செருப்புகளின் அடியில் மட்டுமே கிரிப்பர் டிஸைன்கள் இருக்கும். இவை, எந்தச் சூழலிலும் வழுக்காமல் இருக்கும்.

16. சில வகை செருப்புகளின் அடியில் கிரிப்பர் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும், இவற்றை வீட்டில் டாய்லெட் செருப்பாகப் பயன்படுத்துவர். கிரிப் இல்லாததால், சில சமயங்களில் இவை வழுக்கிவிட வாய்ப்பு உள்ளது. அவசர நேரங்களில் வேகமாக நடக்கும்போது, வழுக்கிவிட்டு கை, கால், தலையில் அடிபட நேரலாம்.

17. டாய்லெட் செருப்பு, வீட்டில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு, தோட்டத்தில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு என எந்தச் செருப்பாக இருந்தாலும், கிரிப்பர் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
எமோஷனல் ஈட்டிங்

18.ஸ்ட்ரெஸ், பதற்றமான உணர்வுகள் தோன்றும்போது தன்னை அறியாமல் அதிகம் சாப்பிட நேரிடும். டென்ஷன், கவலை, சோர்வான தருணங்களில் உணவின் அளவைக் கவனிப்பது நல்லது.

19. சிலர், அதிக டென்ஷன் எனச் சொல்லி, காபி குடிக்கச் செல்வார்கள். டென்ஷன் நாட்களில் 10 காபி, டீ குடிப்பவர்களும் உள்ளனர். இதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
வலி நிவாரணிகள்

20. தலைவலி, உடல்வலி என்றால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால், தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.

21. வலி என்பது நம் உடல் பிரச்னைக்கான அறிகுறியாகவோ, நம்முடைய சில தவறான பழக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது எனக் கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதைக்கு தீர்வு கிடைத்தால்போதும் என, பெயின் கில்லரைச் சாப்பிடக் கூடாது. சுய மருத்துவம் செய்துகொண்டால், நாளடைவில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.

22. தொடர் தலைவலி, வயிற்று வலி, முடி கொட்டுதல், அலர்ஜி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வந்தால், மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவும் நொறுக்குத்தீனியும்

23. மாலை வரைதான் நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும். இரவில் நொறுக்குத்தீனியைச் சாப்பிட்டால், செரிக்கத் தாமதமாகி, உடலின் உயிர் கடிகார சுழற்சி மாறுபடும். இதனால், நெஞ்சு எரிச்சல், ஏப்பம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம்.

உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலம், நொறுக்குத்தீனி சாப்பிட்ட பிறகு சுரக்கத் தொடங்கும். தூங்கும் நேரத்தில் உடல் செய்ய வேண்டிய வேலை பாதிக்கப்பட்டு, செரிப்பதற்கான வேலை உடலில் நடக்கும். எனவே, இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, நொறுக்குத்தீனிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம்

24. புகைப்பது உடலுக்குக் கேடு. ஒருவர் புகைத்துவிட்ட, புகையை மற்றவர்கள் சுவாசிக்கும்போது (பேசிவ் ஸ்மோக்கர்ஸ்) அவர்களுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பவரின் அருகில் நிற்பதுகூட கெடுதல்தான். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
புகைப்பவர்களுக்கும், பேசிவ் ஸ்மோக்கர்ஸ்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நெஞ்சுச்சளி, வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

25. புகைப்பதை நிறுத்துங்கள். நண்பர் புகைபிடிக்கும்போது, அந்த இடத்தில் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். புகைக்கும் எண்ணம் வரும்போது, பழச்சாறு குடிப்பது, ஸ்வீட் லெஸ் சூயிங்்கம் மெல்வது எனக் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.

26. கவனத்தை திசைதிருப்ப முடியவில்லை, மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது என்றால், தகுந்த மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

27. குடிப்பழக்கம் என்று சொல்வதே தவறு. குடி ஒரு பழக்கம் அல்ல நோய். `நான் சோஷியல் டிரிங்க்கர். எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்’ இப்படி, பல்வேறு காரணங்களைச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை குடித்தாலும், குடி என்பது தீமையானது என்பதே மருத்துவம் சொல்லும் உண்மை.

28. பீர் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, யூரிக் ஆசிட் அதிகரித்து கவுட் பிரச்னை ஏற்படும். கால் கட்டைவிரலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல்போகலாம். அதிகமாகக் குடிப்பவர்களின் கல்லீரல் பாதிப்பது உறுதி.

29. குடியை முற்றிலுமாகக் கைவிடுவதுதான் ஒரே தீர்வு. குடிப்பழக்கம் உள்ள நண்பர்களைச் சந்திக்காது இருப்பது, நேரத்துக்கு உணவு உண்பது நல்லது. தேவைப்பட்டால், மது மறுவாழ்வு கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.

காலாவதித் தேதியைக் கவனிக்காமல் இருப்பது

30. பொருட்களை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதிகளைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். காலாவதித் தேதிக்குப் பிறகு பயன்படுத்தும்போது, அதனால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

31. சிலர், எந்தப் பொருளை எடுத்தாலும் பெரிதாகத் தேர்ந்தெடுப்பார்கள். பவுடர், ஷாம்பு, காஸ்மெட்டிக் பொருட்கள் போன்றவை எல்லாமே பெரிய அளவில் இருக்கும். `இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை இல்லாமல் இருக்குமே’ என்று காரணம் சொல்வார்கள்.
நாளடைவில், அவற்றின் லேபிள் கிழிந்துபோகும். இதனால், காலாவதித் தேதி தெரியாமல்போகும். இதை அறியாமல், வருடக்கணக்கில் பவுடரைப் பூசுவதால் சரும அலர்ஜிகள் வரலாம்.

32. எந்தப் பொருளை வாங்கினாலும் காலாவதித் தேதியைக் கவனித்து வாங்குங்கள். காஸ்மெட்டிக் பொருட்களின் காலாவதித் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். காலாவதித் தேதி நெருங்கும் இரு மாதங்களுக்கு முன்னரே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

குளியல்

33.ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில், காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டியது அவசியம்.

34. சிலர், `கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளித்தால்தான் உடல் அலுப்புப்போகும்’ என நினைப்பார்கள். இது தவறு. இளஞ்சூடான நீரில் குளிப்பதே நல்லது. வெயில் காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலே உடல் வெப்பம் குறைந்துவிடும்.

35. அதிக வெப்பநிலையில் உள்ள வெந்நீரில் குளிப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

புறம்பேசுவது

36. மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சிப்பதோ நல்லது இல்லை. இது மனநலனைப் பாதிக்கக்கூடிய விஷயம். ஒருவரின் குணத்தையே அசைத்துப்பார்க்கும் பழக்கம். இதனால் மற்றவர்கள் நம்மைத் தாழ்வாக மதிப்பிடவும் வாய்ப்பு உண்டு. சமூக உறவு, மன அமைதி கெட்டு, மன அழுத்தம் அதிகரிக்கும்.

வாய்ப் பராமரிப்பு

37. காலையிலிருந்து எவ்வளவு உணவுகளை உண்டு ருசித்திருப்போம். தேவைப்படும்போது எல்லாம் நொறுக்குத்தீனி, காபி, டீ, ஜூஸ் எனப் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்போம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், இந்த உணவுத்துகள்கள் பற்களில் மாட்டி இருக்கலாம். இந்த உணவுத் துகள்கள்தான், பாக்டீரியா வளர ஏற்ற இடம். இதனால், பல் சொத்தை உள்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

38. வாய் துர்நாற்றத்தைப் போக்க, மவுத்வாஷ் பயன்படுத்துவதும் தவறு. பற்கூச்சம், ஈறு பிரச்னை எனப் பல காரணங்களுக்காக மவுத்வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டும்.

39. பலரும் மாதக்கணக்கில் ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். அது வளைந்து, நெளித்து பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

40. கடினமானதாக இல்லாமல், ஓரளவுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டும் அல்ல. ஒரு குழந்தையின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் செயல். குழந்தைகளுக்காகச் சேமித்துவைக்கப்படும் பொருளாதாரத்தைவிட, அவர்களுக்குச் சொல்லித்தரும் நற்பழக்கங்களினால், குழந்தையின் மன வளர்ச்சி செழுமையாக இருக்கும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் உதவும். வாழ்வாதாரச் சிக்கல்களைச் சிரமம் இன்றி எதிர்கொள்ள உதவும்.
நல்ல ரோல்மாடல் நீங்கள்தான்!

41. நூறு சதவிகிதம் பர்ஃபெக்டாக யாராலும் இருக்க முடியாது. ஆனால், குழந்தைக்கு முன் நல்ல ரோல்மாடலாக இருப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ‘ஐயோ! இன்னிக்குக் கீரையா? எனக்கு வேண்டாம்’ எனச் சொல்வதற்கு முன், அருகில் குழந்தை இருப்பதைக் கவனியுங்கள். `அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீரை பிடிக்கவில்லை. நாம் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, நாமே காரணமாக இருக்கக் கூடாது.

குழந்தையின் முன்னிலையில் விருந்தோம்பல்

42. வீட்டில் உறவினர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களைப் பற்றி குறை பேசுவதைக் குழந்தைகள் கவனித்தால், அவரின் மேல் மதிப்பு இல்லாமல்போகலாம். மேலும், விருந்தாளியை வரவேற்று உபசரித்து, முகத்துக்கு நேரே மரியாதை தந்துவிட்டு, சென்ற பின் அவரைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கத்தைப் பார்க்கும் குழந்தையும், இதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளும்.

இந்தக் குணம் அவர்களின் மனதில் பதிந்தால், நல்ல அப்பா, அம்மா என்பது நீங்களாக இல்லாமல்போகலாம். குழந்தைகள் முன் எதைச் செய்தாலும் அவற்றைக் கவனித்துச்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

43. விமர்சகராக நீங்கள் இருந்தால், விமர்சிக்கும் பழக்கமும் உங்களிடமிருந்தே குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளலாம். இதுவே, பின்னாளில் குழந்தைகள் புறம்பேசுவது, மற்றவர்களை விமர்சிப்பது, குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் காரணமாகலாம்.

கூடி வாழச் சொல்லிக்கொடுங்கள்!

44. அவசர உலகில் கூட்டுக் குடும்பம் என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. ஆனால், வருடத்துக்கு இருமுறையாவது உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் நேரம் செலவழிப்பது நல்லது. கூடியிருக்கும் தருணங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, பகிர்தல், அன்பு செலுத்துதல், உறவுகளின் மதிப்பு போன்றவற்றை குழந்தைகள் எளிதில் உணர, இது ஒரு வாய்ப்பாக அமையும்.

45. டி.வி., வீடியோ கேம், செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள். புதிய தொழில்நுட்பங்களைச் சிறு வயதிலே தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், அதுவே அவர்களின் உலகமாக மாறிவிடக் கூடாது. பின்னாட்களில் சிறு வயதில் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் இல்லாமல், தனித்து வாழப் பழகிக்கொள்ள நேரிடும்.

46. சாப்பிடும் முன்னர், சாப்பிட்ட பிறகு, மலம், சிறுநீர் கழித்த பிறகு கை கழுவ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தும்மல் வந்தால், கைகுட்டையால் மூட வேண்டும், பொது இடங்களில் மூக்கை நோண்டுவது, வாயில் கைவைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை பர்சனல் ஹைஜீனை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

டின்னர் டைம்… ஃபேமிலி டைம்!

47. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் நாம் இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவழிக்க இயலவில்லை. பலரும் அவர்களது குழந்தைகளுக்கு நேரத்தைக் கொடுக்காமல், பரிசுப் பொருட்களையும் நொறுக்குத்தீனிகளையும் வாங்கித் தருகின்றனர். உண்மையில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் முக்கியம். பரிசுப் பொருட்களோ, தின்பண்டமோ அதற்கு இணையாகாது.

48. பேசவோ, இணைந்து செயல்படவோ டின்னர் டைமை ஃபேமிலி டைமாக மாற்றிக்கொள்வது நல்லது. அன்றைய நாளில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இரவில் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் நடக்கும் விஷயங்கள்தான், அவர்களின் வாழ்க்கையையே வடிவமைக்கும்.

அதிகாலையில் எழும் பழக்கம்

49. காலையில் எழுந்திருப்பதுதான் இன்று நிறைய பேருக்கு முடியாத காரியம். சிறு வயதில் பழகத் தவறிவிட்டதால் ஏற்படும் சிக்கல் இது.

சிறு வயதிலிருந்தே ‘முன் தூங்கி முன் எழும்’ பழக்கத்தை மேற்கொண்டால், பெரியவர்களானதும் சோம்பலைத் தவிர்க்க முடியும். அதிகாலை எழும் பழக்கம், உடலுக்கு ஆரோக்கியத்துடன், மனதுக்கு அமைதியையும் தரும். உடலின் கடிகார சுழற்சி சீராக இயங்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.

விளையாட விடுவது

50. பெரியவர்களுக்கு எப்படி உடற்பயிற்சி செய்வது முக்கியமோ, அதுபோல் குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவசியம். மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் விளையாட்டு நல்லது. ஓடியாடி விளையாடும்போது அவர்களின் சிறு வயதிலேயே உடல்பருமனாக மாறுவது தடுக்கப்படும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

51. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

52.‘காலை உணவு கட்டாயம்’ என்ற விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும். காலை உணவில், மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம் போன்ற சமச்சீர் சத்துக்கள் இருப்பது, அந்த நாளின் தொடக்கத்தை உற்சாகமாக ஆக்கும். அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

53. காலையில் சாப்பிட்ட உணவில் கால் பங்கைக் குறைத்து, மதிய உணவாகச் சாப்பிடுங்கள். இரவு உணவை எளிமையாகச் சாப்பிடப் பழகுங்கள். பெரும்பாலும், இரவு உணவை சைவமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில், அசைவ உணவுகள் செரிக்கத் தாமதமாகும்.

54. வேலைசெய்யும் இடத்தில் உங்களுக்கு அருகில், ஒரு வாட்டர்கேனில் நீர் நிரப்பிவைத்துக்கொண்டு தேவைப்படும்போது நீர் அருந்துங்கள்.

55. ஜங்க் ஃபுட்டுக்குப் பதிலாக, ஹெல்த்தி ஃபுட்ஸை சாப்பிடப் பழகுங்கள். சிப்ஸுக்குப் பதிலாக நட்ஸ், சமோசாவுக்குப் பதிலாக சுண்டல் போன்ற மாற்றங்களைச் செய்யுங்கள்.

56. தினமும் நீங்கள் சாப்பிடுகிற உணவில், ஒரு கப் எக்ஸ்ட்ரா காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

57. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை என ஒவ்வொரு நிறத்தாலும் ஆன காய்கறிகளைக்கொண்டு பிளேட்டை வண்ணமயமாக்குங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்.

58. காபி, டீக்குப் பதிலாக சுக்கு காபி, மூலிகை டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, துளசி டீ, ஆவாரம் பூ டீ போன்ற ஹெல்த்தி சாய்ஸுக்கு மாறலாம்.

59. ஒரே நேரத்தில் அதிகப்படியாகச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, சின்னச் சின்ன மீல்ஸாகப் பிரித்து, ஐந்து அல்லது ஆறு வேளையாகச் சாப்பிடலாம். இதனால், அதீதப் பசி ஏற்படாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படும்.

60. அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. தோல் நீக்கப்பட்ட இறைச்சி, பதப்படுத்தப்படாத ஃப்ரெஷ் இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ‘ரெடி டு மேக்’ எனும் ரெடிமேட் மற்றும் உடனடியாகச் சமைக்கப்படும் இறைச்சிகளைத் தவிர்க்கலாம்.

61. இனிப்பான பொருட்களைச் சாப்பிடத் தோன்றினால், சாக்லேட், கேக் எனத் தேர்ந்தெடுக்காமல், கடலை உருண்டை, எள்ளுருண்டை, கருப்பட்டி, வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள்.

62. ஒன்பது மணிக்கு மேல் சமையலறையில் வேலைசெய்யவோ, உணவு தயாரிக்கவோ முடியாது என்ற விதிமுறையை அமல்படுத்துங்கள்.

63. சர்க்கரை, உப்பு போன்ற வெள்ளைப் பொருட்களுக்கு விடை கொடுத்துவிட்டு, நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, வெள்ளை அரிசிக்குப் பதிலாக கறுப்பு, பிரவுன், சிவப்பு அரிசி, பிராய்லர் கோழிக்குப் பதிலாக நாட்டுக்கோழி, வெள்ளை முட்டைக்கு பதிலாக நாட்டுக்கோழி முட்டை எனத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.

64. உணவை நன்கு மென்று ருசித்து, கவனித்து உண்ணும் பழக்கம் இன்று பெரும்பாலானோருக்குக் கிடையாது. ‘நேற்று இரவு என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்டால், எத்தனை பேரால் சொல்ல முடியும். பசி என்ற காரணம் இருப்பதால், அந்தந்த வேலைக்கு வயிற்றை மட்டும் நிரப்பிக்கொள்கிறோம். இனியாவது, உணவை ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்குவோம்.

65. எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவாகச் சாப்பிடுங்கள். அப்படி அளவாகப் பயன்படுத்தும் எண்ணெயும் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவை செக்கில் ஆட்டப்பட்டவையாக (Cold Pressed) இருப்பது நல்லது. தயாரிக்கும்போது மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படாத எண்ணெய், செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்தான் உடலுக்கு உகந்தது.

ஃபிட்னெஸ் பழக்கங்கள்

66. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நடப்பது ஆரோக்கியமான நற்பழக்கம். நடைப்பயிற்சி செய்வது போர் அடித்தால், இசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது, செருப்பு இல்லாமல் கூழாங்கற்களில் நடப்பது, ஒரு நாள் பூங்காவில் நடந்தால், மறுநாள் கடற்கரையில் நடப்பது எனச் சூழலை மாற்றிக்கொண்டே இருந்தால், நடைப்பயிற்சி என்பது பயிற்சியாக இல்லாமல் நடைப்பழக்கமாக மாறிவிடும். பயிற்சி என்பதுதான் கடினம், பழக்கம் என்று மாறிவிட்டால் அது அன்றாடச் செயலாக மாறிவிடும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரேக்!

67. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருக்கிறோம். அவ்வப்போது அந்த நிலையை மாற்றிக்கொள்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிடங்களுக்கு பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள்.

உடலுக்கு ஏதாவது அசைவுகளைக் கொடுங்கள். உட்கார்ந்து எழுந்திருப்பது, சோம்பல் முறிப்பது, அருகில் நடப்பது போன்ற அசைவுகளைக் கொடுத்தால், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

பயிற்சியைத் திட்டமிடுங்கள்!

68. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எனவே, ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்பது இல்லை. உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும்.

`விதிமுறைகள் நிறைந்த பயிற்சிகளை என்னால் செய்ய முடியாது. எனக்கு அதற்கான நேரம் கிடையாது’ என்று சொல்பவர்கள்கூட, மாடியிலோ, வீட்டு பால்கனியிலோ செடிகளை வளர்ப்பது, அதற்கான வேலைகளைச் செய்வதில் ஈடுபடலாம்.

69. பாட்டு கேட்டுக்கொண்டே சமைப்பது, வேலைசெய்வது என உற்சாகப்படுத்திக்கொள்வதும் மனவளப் பயிற்சிதான்.

70. லிஃப்ட்டில் ஏறாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். பாட்டைப் போட்டு வீட்டிலேயே ஏரோபிக் பயிற்சிகளைச்செய்யலாம்.

71. எப்போதும் சேர், சோஃபாவிலேயே உட்காராமல் தரையில் உட்கார்ந்து பழகலாம். டைனிங் டேபிளைத் தவிர்த்து, தரையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவு உட்கொள்ளும் பழக்கத்துக்கு மாறலாம்.

ஆரோக்கியமான எண்ணங்கள்

72. ஒரு நாளில், அன்றைக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை இரண்டு நிமிடங்களுக்கு நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி, மகிழ்ச்சியான நினைவை நீங்கள் ஈர்க்கும்போது, மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.

73. சமீபத்தில் நீங்கள் செய்த தவறுகள், தோல்விகள் போன்றவற்றை நினைத்து, அதில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை இனி எடுக்கும் முயற்சிகளில் சரிவரச் செய்யுங்கள்.

74. `நோ’ சொல்ல வேண்டிய இடங்களில், `நோ’ சொல்லத் தயாராகுங்கள். பிடிக்காத விஷயங்களில் உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொண்டு எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம்.

75. உங்களைத் திடமாக்குகிற, அறிவை மேம்படுத்துகிற டி.வி சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிக்கைகளை வாசிக்கலாம்.

76. பகல் கனவைக் காண தினமும் 10 நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் எப்படியாக வேண்டும் என்பதை பகல் கனவாகக் காணுங்கள்.

77. மூளைக்குப் பயிற்சியாக குறுக்கெழுத்து விளையாட்டு, சுடோகு போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.

78. நேர்மறையாகப் பேசக்கூடிய நண்பர்கள், உற்சாகப்படுத்தும் பாசிட்டிவ் நண்பர்களோடு பேசிப் பழகலாம்.

எதிர்மறை எண்ணங்களை எப்படிப் போக்குவது?

79.ஒரு நாளைக்கு எத்தனை முறை எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts), உதிக்கின்றன எனக் கவனிக்கத் தொடங்குங்கள். எதற்கு எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன எனக் கவனித்துப் பட்டியலிடுங்கள்.

அடுத்தமுறை, இதுபோல எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது, நேர்மறை எண்ணங்களைத் தோன்றச்செய்து, எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளிவையுங்கள்.

உதாரணத்துக்கு, `எனக்கு வேலை கிடைக்குமா? எனக்கு என்ன தகுதி இருக்கு… இந்த வேலையைச் செய்ய?’ போன்ற எண்ணங்கள் தோன்றினால், உடனே `எனக்கு இந்த வேலை கிடைக்கும். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வேன்’ என நினைக்கப் பழகுங்கள். நினைப்பதோடு நிறுத்திவிடாமல், அதற்கான முயற்சிகளையும் எடுங்கள்.

80. ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும்

நான் நன்மைகளைதான் செய்யப்போகிறேன்.

ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்றைய நாள் எனக்கு அதிர்ஷடத்தைத் தரக்கூடிய நாள் என்பன போன்ற நல்ல எண்ணங்களோடு, அந்த நாளைத் தொடங்குங்கள்.

81. தினமும் ஐந்து நிமிடங்களை, கற்பனைத் திறனுக்காகச் செலவிடுங்கள். அதாவது, விருப்பமான பொருள் கிடைத்துவிட்டால், எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அப்படி ஒரு பொருள் கிடைத்துவிட்டதாக கண்மூடி நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இப்படி, ஒவ்வொரு நாளும் நேர்மறை எண்ணங்களோடு வாழப் பழகிக்கொண்டால், வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைப்பன எல்லாமே ரிப்பன் கட்டப்படாத பரிசுகளாக அமையும்.

மனம் தொடர்பான பழக்கங்கள்

82.தினமும் தியானம் அல்லது யோகா போன்றவற்றை காலையோ, மாலையோ செய்யலாம். உங்களின் உணர்வுகளை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.

83. மிட்-மார்னிங், மிட்- ஈவினிங் வேளைகளில் சில நிமிடங்கள் கண்மூடி, ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுங்கள். இது உங்களின் உடல் மற்றும் மனதுக்கான ஓய்வைத் தரும்.

84. மோசமான உணர்வுகளை ஏற்படுத்தும் உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். காபி, டீ அதிகம் குடித்தால், பின்விளைவாக அதிகக் கவலை, மன அழுத்தம் ஏற்படும். உள்ளுறுப்புகள் பாதிப்பதால், சோர்ந்துபோன உணர்வு ஏற்படும்.

85. மன அழுத்தத்தை உணர்ந்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

86. இயற்கையை ரசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். காலை சூரியன், அந்தி மாலை, மழை, தென்றல், கடல், புல்வெளி, பறவைகள், மலைகள் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு நேரத்தைச் செலவழிக்கத் திட்டமிடுங்கள்.

87. மற்றவர்களுக்கு உணவைப் பரிமாறுவது சிறந்த பழக்கம். அதுபோல, பகிர்ந்து உண்ணுதலும் சிறப்பான குணம்.

88. ஃபன்னி வீடியோஸ், கலகலப்பான நிகழ்ச்சிகள், ஜோக்ஸ், குழந்தைகளின் விளையாட்டு போன்ற சிரிக்கவைக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

89. பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பழக்கங்கள்

உங்களுக்கான வேலைகள் என்னென்ன என்ற பட்டியலைப் போடுங்கள். அதை நோக்கி அன்றைய நாளைத் திட்டமிடுங்கள். அந்த நாளின் முடிவில் `எதைச் செய்தோம்… எதைத் தள்ளிவைத்தோம்… எதை முடிக்கவில்லை’ என்ற குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் உங்களின் வேலையைச் சரிவர செய்ய உதவும்.

காலையில் நாளிதழ்களைப் படிக்கும்போது, உங்களை உற்சாகப்படுத்தும் வாசகம் அல்லது தன்னம்பிக்கை தரும் வாசகத்தைப் படிக்கலாம்.

‘எது நடந்து இருந்தாலும் சரி, நடக்க இருக்கிறதும் சரி நன்மைக்காகவே’ என நினைக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களது மைண்ட்செட்டை எப்போதும் பாசிட்டிவ்வாக மாற்றிக்கொள்ளுங்கள்.

எந்த வேலையையும், தள்ளிப்போட வேண்டாம். இதை ப்ரொகாஸ்டினேஷன் (Procastination) என்று சொல்வார்கள். `நாளை செய்துகொள்ளலாம்’ எனத் தள்ளிப்போடும்போது, அன்றைய நாளின் தோல்விகள் உறுதியாகும். எனவே, தாமதிக்காமல் அன்றாட வேலைகளைச்செய்ய முயற்சி எடுப்பது நல்லது.

90. கற்றுக்கொள்ளும் திறன்கள்

நிறைய மனிதர்களிடம் பேசுங்கள். ஒவ்வொருவரிடம் ஏதாவது ஒரு நல்ல விஷயம், நாம் கற்றுக்கொள்வதற்கு இருக்கும். அதை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொருவரிடமும் நிறையும் குறையும் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, குறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மற்றவர்களை விமர்சிக்கும் உரிமை நமக்குக் கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒரே வேலையைச்செய்து போர் அடித்தால், ஒரு நாள் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தருவது, சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

சமைக்கத் தெரியாதவர்கள் சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். வண்டி ஓட்டத் தெரியாதவர்கள், ஓட்டிப் பழகலாம்.

முதலுதவி வகுப்பு எத்தனை பேருக்குத் தெரியும்? இதைத் தெரிந்துவைத்தால் உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றி இருப்பவருக்கோ ஏதேனும் ஆபத்து வந்தால், அவற்றைச் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். முதலுதவி, நீச்சல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது.

தொழில்நுட்பங்கள், நீச்சல், யோகா, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது, சமீபத்தியத் தகவல்கள், ஆன்லைனில் பில் கட்டுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளை எப்படிச்செய்வது என்பதே சிலருக்குத் தெரியாது. இதற்குத் தங்கள் பிள்ளைகளை நம்பியே இருப்பர். இதுபோன்ற தேவைகளுக்கு யாரையும் நம்பி இருக்காமல், தானே முன்வந்து கற்றுக்கொள்வதும் நல்ல பழக்கம்தான்.

வீட்டில் உள்ள ட்யூப்லைட்டில் ஃபியூஸ் போனால்கூட எலெக்ட்ரீஷியனை அழைத்து வந்து பார்க்காமல், சின்னச்சின்ன வேலைகளைத் தாங்களே எப்படிச் செய்வது எனத் தெரிந்துகொள்ளலாம்.

தூசிதட்டி சேமித்துவைத்திருந்த ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம்.

மாதம் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடுங்கள். இரண்டு புதிய திரைப்படங்களைப் பாருங்கள். படங்கள் என்பது நமக்குத் தெரிந்த மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தற்போது சப்டைட்டில்கள் அடங்கிய வேறு மொழிப் படங்களும் வருகின்றன. அவற்றில் சிறந்த படங்களைப் பார்க்கலாம். இது புதுவித அனுபவத்தைத் தரும். நல்ல நினைவுகளை உருவாக்கலாம்; படத்தில் இருக்கும் சின்ன மெசேஜ்கூட உங்களின் வாழ்க்கைக்கு உதவலாம்.

91.தொடர்பில் இருங்கள்!

எத்தனை பேருக்கு அவரவர் வீட்டு உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும், வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் தேதிகள் நினைவில் இருக்கும்? இதை எல்லாம் ஒரு டைரியில் எழுதிவைத்து அவ்வப்போது திறந்து பாருங்கள். விருப்பமானவரின் பிறந்த நாளை மறக்காமல், அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லுங்கள். உரிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு வாழ்த்து, அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும்; நல்லுறவை மேம்படுத்தும்.

பெர்சனல் ஹைஜீன் பழக்கங்கள்

92. சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் கை கழுவும் பழக்கம் நல்லது. ஒவ்வொரு முறை ரெஸ்ட் ரூம் பயன்படுத்திய பிறகும், கை கழுவும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். ரெஸ்ட்ரூம் கதவுகள், கைப்பிடிகள், டேப் போன்றவற்றை இடதுகையால் பயன்படுத்துங்கள். பொது இடங்களில் கை குலுக்கும் பழக்கம் இருப்பது சகஜம். அதை மனதில் நினைத்து நமது சுகாதாரப் பழக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளவும்.

93.காலை எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். இரவு முழுதும் வாயில் சேர்க்கப்பட்ட கிருமிகள், காபியின் வழியே வயிற்றுக்குள் சென்றால், தொண்டை, உணவுக்குழாயில் தொற்றுக்கள் ஏற்படும். பற்களை, வாயை சுத்தப்படுத்திய பிறகுதான், நீரையோ அல்லது மற்ற உணவுகளையோ சாப்பிட வேண்டும். கடைகளில் காபி, டீ கப்களை வலது பக்கம் பிடிக்காமல், இடது பக்கம் பயன்படுத்தி அருந்துவது ஒரளவு பாதுகாப்பைத் தரும். ஏனெனில், பலரும் வலது பக்கத்தில் வைத்துதான் காபி, டீ யைச் சுவைத்திருப்பார்கள்.

ஒருவரது செல்போன், இயர் ஃபோன் போன்றவற்றைப் பயன்படுத்தத் தந்தால்கூட, ஒருமுறை துடைத்து விட்டுக் கொடுப்பதுதான் சரி. அதுபோல் ஒவ்வொரு பொருட்களையும் மற்றவரிடம் கொடுப்பதற்கு முன் ஒரு முறை சுகாதாரத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

94. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் தேய்க்கும் பிரஷை மாற்றவும். அதுபோல் அன்றாடம் பயன்படுத்தும் சீப்பை வாரம் ஒருமுறை கழுவலாம். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. அதுபோல், கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தனியாக வைத்துக்கொள்வது அவசியம். ஹோட்டலில் வைக்கப்படும் ஹேண்ட் டவல்கள் எந்த அளவுக்குச் சுகாதாரமாக இருக்கின்றன என்று தெரியாது. ஆகையால், டிஷ்யூவைப் பயன்படுத்துவதே சிறந்தது.

95. ஹோட்டலில் சாப்பிட்ட பின் வைக்கும் இனிப்பு மிட்டாய்களைத் தவிர்த்துவிடுங்கள். அதில், பெரும்பாலானோர் கைவைத்து எடுத்திருக்கலாம். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின், லிஃப்ட் பட்டன்கள், ஏ.டி.எம் மெஷின் பட்டன்கள், ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றைத் தொட்ட பிறகு கை கழுவிக்கொள்வது நல்லது. எல்லா இடங்களிலும் தண்ணீரைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, கைகளிலேயே ஹேண்ட் சானிடைசர் வைத்திருக்கலாம்.

96. வீட்டைச் சுத்தம் செய்யும்போது அதிகம் கவனிக்காத இடங்களான சோஃபா மூலைகள், சுவிட்ச் போர்டு, ரிமோட், கைப்பிடிகள், கம்ப்யூட்டர் கீ போர்டு, வாட்டர் கேன் மூடி, திரைச்சீலைகள் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

97. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழக் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்

தினமும் அரை மணி நேர் நடைப்பழக்கம்.

காலை எழுந்ததும் பல் துலக்கிய பிறகு நீர் ஆகாரத்தைக் குடிப்பது.

தினமும் ஒரு புதிய நண்பரை உருவாக்குவது.

தியானம் அல்லது யோகாவுக்கு நேரம் ஒதுக்குவது.

பெரும்பாலும் உங்களது உணவு காய்கறி, பழங்கள், பயறு, பருப்பு வகைகளால் தயாராகி இருப்பது.

98. புற்றுநோய் தவிர்க்க ஐந்து வழிகள்

வேகவைத்த காய்கறிகளை ஒருவேளை உணவாகச் சாப்பிடுவது. பழங்களையும், நட்ஸ்களையும் நொறுக்குத்தீனியாகச் சுவைப்பது.

மூலிகை டீ, கீரை சூப், மூலிகை ரசங்களை அவ்வப்போது சாப்பிடுதல்.

குடி, புகைப் பழக்கங்கள் இல்லாமல் இருத்தல.

முன் தூங்கி முன் எழும் பழக்கம். எட்டு மணி நேரம் சீரான தூக்கத்தைக் கடைப்பிடித்தல்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்ப்பது.

99. தீய பழக்கங்களைக் கைவிட ஐந்து வழிகள்

தீய பழக்கங்களை விட வேண்டும் என டைரியில் எழுதிவையுங்கள். மனதில் பத்து முறை அடிக்கடி சொல்லிப்பாருங்கள்.

எந்தச் சூழல் உங்களைத் தீய பழக்கங்களுக்கு இழுத்துச் செல்கிறதோ, அந்தச் சூழலைத் தவிர்த்திடுங்கள்.

எந்தச் சூழலிலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல், ஒவ்வொரு தீய பழக்கத்தை விடும்போதும், உங்களுக்கு நீங்களே பரிசுப் பொருட்களை வாங்கி, உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.

தனிமையாக இருப்பதைத் தவிர்த்தாலே, தீய பழக்கங்களை வெகு சீக்கிரத்தில் விட முடியும்.

விருப்பமானவர்கள், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவுசெய்யுங்கள்.

100. மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்

மனதுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள்.

கிடைக்கும் நேரத்தை இயற்கையுடன் செலவழியுங்கள்.

உங்களுக்கு நடந்த நல்ல அனுபவங்களைத் தினந்தோறும் எழுதுங்கள்.

வாய்விட்டு சிரிப்பதால் எண்டோர்பின் சுரக்கும்; இது மகிழ்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

பாசிட்டிவ்வாகப் பேசும் நண்பர்கள், உறவினர்களோடு அதிகமான நேரத்தைச் செலவழியுங்கள். 
நன்றி தமிழ் பல்சுவை.

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை :


அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை :

of course சிலபல இன்டர்நெட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை.

 ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

 பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

 ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.

பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.

பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

> முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்

குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று குடையாதீர்கள்

சனி, 3 மார்ச், 2018

தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டுநாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...



தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம்  நாட்டுநாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*

“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.

தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*

நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*


வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*

அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*

*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*

ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...

என் மனைவி சும்மாதான் இருக்கா என்று கூறும் ஆண்களுக்கான ஒரு பதிவு !!




என் மனைவி சும்மாதான் இருக்கா என்று கூறும் ஆண்களுக்கான ஒரு பதிவு !!

நான் வேலைக்கு போறேன்... என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!"*

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர்: நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர்: உங்கள் மனைவி?

கணவர்: அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர்: குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே. சும்மாதான் இருக்கா.


நிபுணர்: தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?

கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர்: உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?

கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.


நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.

ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.

ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.

நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.


உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

இதை படிக்கும் சகோதர ஆண்களே உங்கள் மனைவியை மதியுங்கள் அவளுக்கும் ஓய்வு கொடுங்கள் மனரீதியாக....

இதில் இன்னும் மோசம் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை..

பெண்மையை மதிக்கும் அத்துணை ஆணுக்கும்

பெண்ணென பிறந்த அத்துணை பெண்ணுக்கும் இப்பதிவு சமர்பணம்

ஹோலி ஹோலி... சுப லாலி லாலி..


ஹோலி ஹோலி... சுப லாலி லாலி..

 ஹோலி பண்டிகை வரலாறு

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.

இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

 மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.

 இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

 விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர்.

இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ' பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், ' குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.

ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.

 இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகா வின் உதவியை நாடினான்.
ஹோலிகா , நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள்.

எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான்.

 ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள்.

 இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும்.

 அப்போது
ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள்.

 தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

 இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர்.

அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள்.

கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.

சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார்.

சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார்.

உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார்.

 மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார்.

அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனி
ன் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார்.

 இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள்.

தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும்
 சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது

.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

வெள்ளி, 2 மார்ச், 2018

அழகான பாதத்திற்கு...


அழகான பாதத்திற்கு...

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். தை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு, கஸ்தூரி மஞ்சள், பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

தினமும் இரவில் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்த்து கழுவியபின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு சிறிது மசாஜ் செய்துவர கால் வெடிப்பு மறையும்.

கற்றாழையில் இருக்கும் வழ வழுப்பான திரவத்தை ; தினமும் ; ; ; ; காலிலி்ல் ; தடவி வந்தால் கால் பாதம் பளபளப்பாகும்.